உலகப் பொருளாதாரத்தில் 6 வது இடத்தில் உள்ள பிரான்ஸை முறியடித்துள்ள இந்தியா, வரும் நிதியாண்டின் முடிவில் 7.4 சதவீதத்திலிருந்து, 7.6 சதவீதம் வரை வளர்ச்சி பெறும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் எண்ணெய் விலை உயர்வு இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.
வளர்ச்சி - வீழ்ச்சி
ஜூலை 19 ஆம் தொடங்கி 24 ஆம் தேதிவரை உலகப் பொருளாதார அறிஞர்கள் 70 பேர் கலந்து கொண்ட வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் அவர்கள், இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தல் செலவினங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்தனர். இந்தியாவின் முக்கிய இறக்குமதியாக இருக்கும் பெட்ரோல், டீசலின் உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இது இந்திய ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சியை உருவாக்கும் என்றனர்.
காவு வாங்கும் எண்ணெய் விலை உயர்வு
அண்மையில் உயர்ந்து கொண்டிருக்கிற எண்ணெய் விலை இந்திய அரசுக்கு தவிர்க்க முடியாத அச்சுறுத்தலாக மாறும்போது, வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடிய அளவுக்கு ரிசர்வ் வங்கியை கட்டாயப்படுத்தும் என்கின்றனர். எண்ணெய் விலையில் ஒவ்வொரு 10 டாலர் உயர்வும், இந்திய பொருளாதார வளர்ச்சியில் 30 முதல் 40 அடிப்படை புள்ளிகள் வரை காவு வாங்கும் என்று கணிக்கின்றனர். இது உள்ளீட்டுச் செலவினங்களை அதிகரிப்பது மட்டுமல்லாது, நுகர்வை குறைக்கும் என்று சொல்கின்றனர்.
விரைவான வளர்ச்சி
பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புகளால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையிலிருந்து தப்பிய இந்திய பொருளாதாரம் விரைவான வளர்ச்சி பெற்றது. கடந்த ஆண்டுக் காலாண்டு வாக்கில் 5.6 சதவீதத்திலிருந்து 7.7 சதவீதத்துக்கு அதிகமாக உயர்ந்தது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் காலாண்டு வளர்ச்சிக் கண்ணோட்டத்துடன் ஒப்பிடும்போது வளர்ச்சி விகிதம் நிலையானதாக இருக்கும். ஆனால் 7.7 சதவீத வளர்ச்சியுடன் சமனாகும் என்றோ, விஞ்சும் என்றோ கருத முடியாது.
மந்த நிலையை உருவாக்கும் காரணிகள்
வட்டி விகிதங்கள் அதிகரிப்பு, எண்ணெய் விலை உயர்வு, பரிமாற்ற விகிதங்களின் நிச்சயமற்ற தன்மை மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அரசியல் ஆபத்துக்கள் ஆகியவை பொருளாதார வளர்ச்சியில் மந்தமான நிலையை ஏற்படுத்தும் என்று மூத்த பொருளாதா அறிஞர் சக்ரபர்த்திக் கூறுகிறார். 2019 ஆம் ஆண்டில் ஏற்படக்கூடிய செலவினங்கள் கிராமப்புற பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை உருவாக்கும் என்கிறார்.
வர்த்தக மோதலில் தாக்கம் இல்லை
வர்த்தக முரண்பாடுகள் இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி மிகப் பெரிய மாற்றத்தை சந்திக்கவில்லை என்பது பொருளாதார அறிஞர்களின் கூற்றாகும். சர்வதேச நிதியத்தின் வளர்ச்சி இலக்கான 7.3 விழுக்காட்டை இந்தியப் பொருளாதாரம் கடந்துள்ளது. அமெரிக்காவின் வர்த்தக மோதல்கள் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ளனர்.
பணவீக்கம் - வட்டி விகிதங்கள் உயர்வு
2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 4.9 ஆக இருக்கும் என்று கணித்துள்ளனர். இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுகளில் வட்டி விகிதங்கள் உயரக்கூடும் என்று தெரிவித்துள்ள அவர்கள், அதனை இந்த ஆண்டின் 4 வது காலாண்டிலேயே எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளனர்.