அடுத்த நிதி ஆண்டு முதல் இந்தியாவில் 5 மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிறிய நகரங்களில், சில்லறை வணிகக் கடைகளை திறக்க டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனமானது ஸ்டார்பஸ் உடன் கூட்டணி வைத்துள்ள டாடா குளோபல் பீவரேஜஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
ஸ்டார்பக்ஸ் உலக நிறுவனம்
காபி மற்றும் உணவு வகைகளை விற்பனை செய்து வரும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 1550 கடைகள் உள்ளன. உலகம் முழுவதும் 27 நாடுகளில் ஸ்டார்பக்ஸ் கடைகள் இயங்கி வருகின்றன.
உலகநாடுகளில் காபி கடைகள்
சொந்த நாடான அமெரிக்காவில் அதிகமாக விற்பனை நிலையங்களைக் கொண்ட ஸ்டார்பக்ஸ் நிறுவனம், 2012 ஆண்டு முதல் சீனா, கனடா, ஜப்பான், பிரிட்டன் மற்றும் இந்தியாவில் அங்காடிகளைத் திறந்து வருகிறது. 900 கடைகளைக் கொண்ட பிரிட்டன், ஸ்டார்பக்ஸின் 5 வது பெரிய சந்தையாக உள்ளது.
இந்தியாவில் முதலீடு அதிகரிப்பு
இந்தியாவில் 2015 ஆண்டுக்குள் 107 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் காபி கடைகளைத் திறக்க திட்டமிட்ட ஸ்டார்பக்ஸ், 2025 ஆம் ஆண்டுக்குள் 855 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளதாக அந்த நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் வளர்ச்சி
இந்திய முதலீடுகள் வளர்ச்சியை நோக்கி செல்வதால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், கடந்த ஆண்டை விட அதிக கடைகளை இந்தியாவில் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. பெரிய நகரங்களை விட இரண்டாம் கட்ட நகரங்களைக் குறி வைத்து திறக்கப்படும் எங்கள் அங்காடிகள், நீண்ட கால அடிப்படையில் இந்தியாவை 5 வது சந்தையாக மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வணிக விரிவாக்கம்
2018 மார்ச் 31 இல் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவில் ஸ்டார்பக்ஸின் விற்பனை 28 சதவீதம் அதிகரித்துள்ளது. 2017 மார்ச் இல் முடிவடைந்த ஆண்டில் இந்தியாவில் 272 கோடி ரூபாய் அளவுக்கு ஸ்டார்பக் சந்தை விற்பனையை எட்டியுள்ளது. இதனால் இந்தியாவில் மேலும் புதிய கடைகளைத் திறப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனா மற்றும் ஆசியா, பசிபிக் நாடுகளில் 13 சதவீதம் வருவாய் கிடைத்துள்ளது. 2018 அக்டோபருக்குள் ஆயிரத்து 100 புதிய கடைகளை திறக்க ஸ்டார்பக்ஸ் திட்டமிட்டுள்ளது.