இந்தியா முழுவதும் 50 சூப்பர் மார்க்கெட்டுகளைத் திறக்கப் போவதாக அறிவித்துள்ள வால்மார்ட் நிறுவனம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 15 கடைகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பைப் பெறவுள்ளதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
வேலை வாய்ப்பு - உறுதி
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், பிரதமர் மோடி, முதலமைச்சர் ஆதித்யநாத் முன்னிலையில் வால்மார்ட் இந்தியா நிறுவனம் , இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் மூலம் மறைமுகமாக 2 ஆயிரம் பேருக்கும், மண்ணின் மைந்தர்கள் 30 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என வால்மார்ட் அதிகாரி ரஜனீஷ் குமார் உறுதி அளித்துள்ளார்.
60 ஆயிரம் கோடி முதலீடு
வால்மார்ட், அதானி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை இறக்கியுள்ளன. இது மின்னணு பரிவர்த்தனையில் ஒரு அதிர்வை உருவாக்கும் என்று உத்திரப்பிரதேசத்தின் தொழில்துறை அமைச்சர் சதீஷ் மகானா கூறினார்.
விவசாயிகளுக்கு ஆதரவு
உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவிக்கும் வால்மார்ட் இந்தியா நிறுவனம், விவசாய விளை பொருட்களில் முதலீடு செய்வதையும், அவர்களின் திறன்களை வளர்த்தெடுப்பதிலும் முக்கியப்பங்கு வகிப்பதாகக் கூறுகிறது. வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டுகள் வேலை வாய்ப்பை உருவாக்குவதோடு நின்று விடாமல் விவசாயிகள் மற்றும் சிறு கடைக்காரர்களுக்கும் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
வாழ்க்கையில் மாற்றம்
உணவுப்பாதுகாப்பு தொடர்பாகச் சில்லறை வணிகர்களுக்கும், விவசாயிகளுக்கும் பயிற்சி அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். லட்சக்கணக்கான விவசாயிகள், சில்லறை வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் வளர்ச்சி என்ற அரசின் குறிக்கோளை அடைய முடியும் என்பதை நம்புகிறோம் என்கிறார் வால்மார்ட் அதிகாரி குமார்.
நெசவாளர் வளர்ச்சி - குறிக்கோள்
வாரணாசியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளர்களுக்கும், வாழ்க்கையில் போராட்டங்களைச் சந்திக்கும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இது சிறந்த களமாக இருக்கும். விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும் உதவுவதைப் போலவே நெசவாளர்களுக்கும் பலன்களை அளிக்கக் காத்திருக்கிறோம். 77 சதவீத பங்குகளை வாங்கிப் பிளிப்கார்ட் நிறுவனத்தை வசப்படுத்தியுள்ள வால்மார்ட், அதன் மூலம் நெசவாளர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்று உறுதி அளித்துள்ளது
நீள்கிறது உதவிக்கரம்
புறக்கணிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைக்கு எங்கள் நீள்வதைப் போலவே, லட்சக்கணக்கான நுகர்வோருக்கு நேரடியாகப் பொருட்களை வழங்கி வருகிறோம். உ.பி அறிமுகப்படுத்தியுள்ள வால்மார்டின் சன்ஹரா பிரயாஸ் மூலம் விவசாயிகளை இணைப்பதன் மூலம் உற்பத்தியையும், வருவாயையும் பெருக்குகிறோம்.