அமேசான், பிளிப்கார்ட் போன்ற மின்னணு வணிகத் தளங்களில் அதிரடி சலுகைகளுடன், விலையைக் குறைத்து விற்பனை செய்யும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது விலைச் சலுகைக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இந்திய வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது.
மின்னணு வணிக தேசிய கொள்கை
மின்னணு வணிகத்தில் பன்முகத்தன்மையுடன் கூடிய ஒரு ஒழுங்குமுறையை உருவாக்குவது தொடர்பாக,தொழிவ்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையிலான குழு நேற்று விவாதித்தது. குறிப்பிட்ட தேதிகளில் வெளியாகும் சலுகை அறிவிப்புகளை நிறுத்தும் ஒரு தேசிய கொள்கையின் மீது ஆலோசனை நடத்தியது. உணவு பரிவர்த்தனை செய்யும், மின்னணு தளங்களான ஸ்விக்கி, சுமோட்டோ உட்பட நிதிப்பரிவர்த்தனை தளங்களான பே டிஎம், பாலிசி பஷார் உள்ளிட்ட தளங்களையும் கட்டுப்படுத்தக் கூடியதாக விதிமுறைகளை வகுத்துள்ளது.
உள்ளூர் நிறுவனங்களுக்கு உத்வேகம்
உள்ளூர் மயமாக்கலை அடிப்படையாகக் கொண்ட மின் வணிகக்கொள்கை யில், உள்ளூர் பொருள் விற்பனை ஊக்கப்படுத்த வசதியாக
விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்நிய நேரடி முதலீட்டில் இந்திய பொருட்கள், சிறு மற்றும் குறு தொழில்களின் தயாரிப்புகளை மின்னணு வணிகத் தளத்தில் விற்பனை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியச் சந்தையில் 25 மில்லியன் டாலரில் இருந்து 250 மில்லியன் டாலர் வரை இதன் மூலம் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பொருட்களுக்கு முன்னுரிமை
உலக முதலீட்டாளர்களாகக் கருதப்படும் சாப்ட் பேங்க், வால்மார்ட், அலிபாபா மற்றும் டைகர் குலோபல் உள்ளிட்ட நிறுவனங்களை மின் வணிகத்தில் நுழைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட உள்நாட்டுப் பொருட்களையே நூறு சதவீதம் விற்பனை செய்ய வேண்டும். நேரடி அந்நிய முதலீட்டுத் திட்டத்தில் கீழ் இந்தியப் பொருட்களையே விற்க வேண்டும் என விதிமுறை வலியுறுத்தியுள்ளது.
வரிச்சலுகை
உள்நாட்டுத் தொழில்துறைக்கு வாய்ப்பு அளிப்பதோடு, வரிச்சலுகைகளையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளது. இதற்கு ஏதுவாகச் சரக்கு மற்றும் சேவை வரியில் மாற்றம் செய்யுமாறு நிதித்துறைக்குப் பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளது.
விலை வேறுபாடு கூடாது
அங்காடிப் பொருட்கள் மின் வணிகம் மூலமாக விற்பனை செய்வதாகச் சந்தேகித்துள்ள அரசு, அங்காடிகள் மட்டும் அல்லாமல் அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களிலும் விலை சலுகைகளை அறிவிக்கக் கூடாது என இந்த விதிமுறை வலியுறுத்தியுள்ளது. ஒரே பொருளுக்கு வேறு வேறு சலுகை விலைகளை அறிவிக்கத் தடை விதிக்கவும், ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் ஒரு பொருளுக்கு ஒரே விலையை நிர்ணயிக்க இந்த விதிமுறைகள் கட்டாயப்படுத்தியுள்ளன.
வாடிக்கையாளர்களுக்குச் சிக்கல்
டி.வி. கைப்பேசி, ஆயத்த ஆடைகளை மின்னணு வணிகத்தில் மலிவு விலையில் வாங்கிப் பழக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, மத்திய அரசு கொண்டு வர விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் நுகர்வு கலாச்சாரத்தில் ஒரு வலியை உருவாக்கியுள்ளது.