பிஸ்கட் தயாரிப்பில் பிரபலமான நிறுவனமான பிரிட்டானியா, 300 கோடி ரூபாய் செலவில் பால் பொருள் தயாரிப்பு ஆலையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் 50 க்கும் மேற்பட்ட புதிய பொருட்களைச் சந்தைக்குக் கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது.
ஆந்திராவா, மகாராஷ்டிராவா
ஆந்திரா அல்லது மகாராஷ்டிரா மாநிலங்களில் ஒருங்கிணைந்த அலகுகளைத் தொடங்கவும், தொடர்ந்து சங்கிலித் தொடராக முதலீடுகளை இறக்கவும் திட்டமிட்டுள்ளது. பால் பொருள் தயாரிப்புக்கு மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் தர தாமதிப்பதால், ஆந்திராவில் அமைக்க ஆலோசித்திருப்பதாகப் பிரிட்டானியாவின் தலைவர் நுஷி வாடியா தெரிவித்தார்.
பால் பண்ணை இல்லை
நேரடியாகப் பால்பண்ணைகளில் முதலீடு செய்யாமல், மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருள் தயாரிப்புகளில் முதலீடு செய்வதுதான் பிரிட்டானியாவின் திட்டமாக உள்ளது. இதில் ரஸ்க், கேக் மற்றும் கிராய்செண்ட் உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தியாகவுள்ளன.
சந்தையில் முந்த முயற்சி
புதிதாகத் தயாரிக்கப்படும் பிராண்டுகளைச் சந்தைப்படுத்துவதில் வலுவான நிலையை எட்டலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள வாடியா, குட் டே பிஸ்கட் நாட்டின் நம்பர் ஒன் பிராண்டாக மாறும் என்றும், அடுத்தச் சில
ஆண்டுகளில் பார்லி ஜி முந்தும் என்று கூறினார்.
புதிய லோகோ
நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முகமாகப் புதிய லோகோவை பிரிட்டானியா அறிமுகப்படுத்துகிறது. அடுத்த 6 மாதங்களில் தொடர்ந்து புதிய தயாரிப்புகளை வெளியிடவும் முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 50 தயாரிப்புகள் சந்தைக்கு எடுத்து வருகிறது.
பிரிட்டானியாவின் லாபம்
ஜூன் 30 2018 ஆம் ஆண்டுடன் முடிவடைந்த காலாண்டில் 246 கோடி ரூபாயை பிரிட்டானியா நிகர லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் இது 209 கோடி ரூபாயாக இருந்தது. ஒப்பீட்டு அடிப்படையில் நிகர விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 15 விழுக்காடு அதிகரித்து வருவதாகப் பிரிட்டானியா தெரிவித்துள்ளது.