அமெரிக்கா- துருக்கி இடையே நிகழ்ந்து வரும் சச்சரவுகள், சர்வ தேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பை வரலாறு காணாத வகையில் புரட்டிப்போட்டுள்ளது. ஈக்விட்டி மற்றும் பணச்சந்தைகளில் ஏற்படுத்திய அதிர்வுகளால் பங்குச் சந்தை இன்று காலை 300 புள்ளிகளை இழந்தது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 69 புள்ளி 62 என்ற நிலைக்குச் சென்றது. துருக்கியில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு இந்திய ரூபாயில் பாதிப்பை ஏற்படுத்த முடியுமா
பழிக்குப் பழி
ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்கிய துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளது. இருந்தும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதில்லை எனத் துருக்கி தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாகத் துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யும் அலுமினியம், இரும்பு உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா வரியை உயர்த்தியது.
வீழ்ச்சியடைந்த லிரா
அமெரிக்காவின் பொருளாதாரத்தடை மற்றும் வரிவிதிப்புகளால் துருக்கியின் பணமதிப்புப் படுபயங்கரமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 12 மாதங்களாக வீழ்ச்சியைச் சந்தித்து வரும் துருக்கியின் லிரா இன்று காலை 12 சதவீதம் வரை சரிந்தது.
ஆட்டம் காட்டும் மோதல்
உலக நாடுகளுக்கு இடையே நடந்துகொண்டிருக்கின்ற வர்த்தக மோதல். சர்வதேச சந்தைகளில் ஆட்டம் காட்டத் தொடங்கியுள்ளது. லிராவின் மோசமான சரிவு இந்திய முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது-
பிரிக்சில் பாதிப்பு
பிரிக்ஸ் நாடுகளின் பணமதிப்புகளிலும் துருக்கியின் பொருளதாரச் சரிவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் ரபிள், தென் ஆப்பிரிக்காவின் ரான்ட், சீனாவின் யான் ஆகிய பண மதிப்புகளிலும் பாதிப்பை உருவாக்கியது.
தீர்வு தேவை
சீனாவின் பொருளாதாரம் மந்த நிலைக்குச் சென்றுள்ளது. இதனால் பணக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்து முதலீட்டாளர்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என ப்ளும் பர்க் கூறியுள்ளது.