அதிவிரைவு அகன்ற அலைவரிசை மற்றும் ஜிகா பைபர் சேவைகளைத் தீபாவளிக்கு முன்பே தொடங்கவுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நிகரான சேவையை 50 சதவீத தள்ளுபடியுடன் வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜிகாபைபர் சேவைகளைச் சலுகை விலையில் பெற விரும்பும் சந்தாதார்களுக்கான முன்பதிவு, சுதந்திர தினமான இன்று தொடங்குகிறது.
நவம்பர் 7 - தொடக்கம்
ஜியோ அகன்ற அலைவரிசை, இணையத் தொலைக்காட்சி உள்ளிட்ட சலுகைகளுடன் கூடிய சேவையை நவம்பர் 7 ஆம் தேதிக்குள் தொடங்க இருக்கிறது. முதல்கட்டமாக மாநகராட்சிகளிலும், முக்கியமான நகர்ப்புறங்களிலும் நடைமுறைக்கு வருகிறது.
அதிர வைக்கும் ஜியோ
ஜிகாபைபர் சேவையை 50 விழுக்காடு சலுகைகளுடன் வழங்கவுள்ளதால், அகன்ற அலை வரிசைகளை வழங்கிவரும் போட்டியாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 100Mbps வேகத்துடன் 100 ஜி.பி அகன்ற அலைவரிசை டேட்டாக்களை 700 முதல் 1000 ரூபாய் மதிப்பீட்டில் கேபிள் ஆபரேட்டர்கள் வழங்கி வருகிறார்கள். தொலைக்காட்சி சேவைக்குக் கூடுதலாக 250 முதல் 300 ரூபாயை வசூலித்து வருகின்றனர்.
சலுகைகள்
90 நாட்களுக்கு 100Mbps அதிவிரைவு இணையதளச் சேவையுடன், மாத ஒதுக்கீடாக 100 ஜி.பி டேட்டா மற்றும் ஜியோ பிரீமியம் செயலியையும் அளிக்கிறது.ஒரு மாதத்துக்குள் 100 ஜி.பி டேட்டாவை பயன்படுத்தி முடித்தவர்கள், மை ஜியோ செயலி மற்றும் ஜியோ டாட் காம் மூலம் 40 ஜி.பி டேட்டாக்களை டாப் அப் செய்துகொள்ளலாம். இதற்கு இதர வரி மற்றும் இன்ஸ்டாலேசன் கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வைப்புத்தொகை
ONT சாதனத்தைப்பெற விரும்புவோர்கள், திரும் பெறத்தக்க வைப்புத் தொகையான 4,500 ரூபாயை டெபிட், கிரீடிட் கார்டுகள் மூலமாகவோ, ஜியோ மணி மற்றும் பேடிஎம் மூலமாகவோ செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.
அதிவிரைவு பதிவிறக்கம்
ஜியோ ஜிகா பைபர் மூலம் அதிவேக செயல் திறன், விரைவான பதிவிறக்கம், பதிவேற்றங்களைச் செய்து கொள்ளலாம் என ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. ஜியோ ஜிகாபைபர் மூலம் வீட்டுக்குள் ஒரு உயர்வேக இணையதளச் சேவையை உணர முடியும் எனத் தெரிவித்துள்ளது.