இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான ஆதித்யா பிர்லா குழுமத்தின் ரீடைல் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை நிறுவனமான மோர் சூப்பர்மார்கெட் நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டத்துடன் அமேசான் இறங்கியுள்ளது.
அமேசான்
சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா, ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், தற்போது அமேசான் அலிபாபாவிற்குப் போட்டியாக அதித்யா பிர்லா ரீடைல் லிமிடெட் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
4400 கோடி ரூபாய் முதலீடு
அதித்யா பிர்லா ரீடைல் லிமிடெட் நிறுவனத்தின் 42-49 சதவீத பங்குகளைக் கைப்பற்றும் திட்டத்துடன் அமேசான், சமாரா கேப்பிடல் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து சுமார் 4,200 - 4,400 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
அரசு அனுமதி
சமீபத்தில் மத்திய அரசு மல்டி பிராண்ட் ரீடைல் நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளைக் கைப்பற்ற அன்னிய முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய வாய்ப்பு
இந்தியா டெலிகாம் சந்தையில் ஏற்பட்ட அதே பாதிப்புத் தற்போது ரீடைல் சந்தையிலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியில் எந்த நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறதோ அடித்த 10 வருடத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய லாபம் காத்திருக்கிறது.