பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள மல்லுக்கட்டும் உலக நாடுகள், நாணய மதிப்புகளைக் காப்பாற்ற பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றன. அந்நியச் செலாவணி இருப்பு விகிதங்களும், வர்த்தகம் உபரி மற்றும் மூலதனமும் ஒரு நாட்டின் நாணய மதிப்பை காப்பாற்றும் அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது.
உலக நாடுகளின் வர்த்தகப்போர்கள் நீடிக்கும் பட்சத்தில் ஏற்றுமதியை அதிகரிப்பதில் இந்தியாவுக்குப் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது. ரூபாய் மதிப்பின் அதலபாதாள வீழ்ச்சியும், அமெரிக்காவின் வட்டி விகித உயர்வும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்திய சந்தையிலிருந்து வெளியேற்றி இருக்கிறது. தேர்தல் நடைபெறும் சூழலில் மோடி அரசுக்கு இது சாதமில்லை என்றே பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நாணய வலிமை
உலக வர்த்தகத்தில் ஒரு நாடடின் போட்டித் தன்மையை நாணய வலிமை தான் தீர்மானிக்கிறது. இதனால் அந்நியச் செலாவணி மற்றும் வர்த்தக உபரியை பேணுவதில் அநேக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. வர்த்தகப் பற்றாக்குறை, எதிர்மறையான நடப்புக் கணக்குகள், மூலதன பின்னடைவை கொண்ட நாடுகள், நாணய மதிப்பில் வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் டாலர்களை வாங்குவதையும், விற்பதையும் நடைமுறையாகக் கொண்டுள்ளன.. டாலர்களை வாங்குவதால் நாணய மதிப்பை தக்க வைக்கப்படுகிறது டாலர்களை விற்பதால் கஜானாவில் இருந்து அந்நியச் செலாவணி காலியாகிறது.
சீனாவின் மதிநுட்பம்
நாணய மதிப்பில் மதிநுட்பமான நடைமுறைகளைக் கையாண்ட சீனா அதில் லாபம் ஈட்டியுள்ளது. உலக வர்த்தகத்தில் பலவீனமான நாணயங்கள், விலை போட்டியில் ஒரு சாதகமான நன்மைகளை வழங்குகின்றன. செயற்கையான முறையில் நாணய வீழ்ச்சியைத் தக்க வைத்துக் கொண்டிருந்த சீனா, உலகளாவிய வர்த்தகத்தில் எதிர்பார்த்த பலனை அடைந்தது. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்த அழுத்தங்களையடுத்து கரன்சி வீழ்ச்சியை அனுமதித்தது. இது உற்பத்தியில் ஒரு முக்கியமான இடத்துக்குச் சீனாவை கொண்டு சென்றது.
செயற்கையான வீழ்ச்சி
வர்த்தகப் போர்கள் பொதுவாகப் பெரும்பாலான நாடுகளுக்குச் சவாலை உருவாக்கும். உலக வர்த்தகத்தில் தங்கள் வளர்ச்சி விகிதங்களை இழக்க நேரிடும். இதுபோன்ற சூழல்களில் பல நாடுகள் தங்கள் நாணயங்களைச் செயற்கையாக வீழ்ச்சியடையச் செய்கின்றன.
வீழ்ச்சியை அனுமதிக்கும் சீனா
2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பு ஆண்டில் சீனாவின் ரென்மின்பி வீழ்ச்சியடைந்தது. 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவுடன் ஏற்பட்ட மோதலில் பொருளாதார மந்த நிலை உருவானது. இதனால் ஜூன் மாதம் டாலருக்கு எதிரான சீன நாணயத்தின் மதிப்பு 3.2% விழுக்காடு பலவீனமடைந்தது. இந்த மோசமான வீழ்ச்சி பரிமாற்ற விகிதத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியது. வர்த்தகச் சண்டை நடக்கும்போதெல்லாம் கரன்சி மதிப்பை சீனா அனுமதிக்கிறது.
உலக நாடுகளின் உத்தி
இந்தப் போக்கு வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தில் டாலருக்கு நிகரான மதிப்பில் வீழ்ச்சியைச் சந்திக்கிறது. இறக்குமதியான பொருட்களின் விலை அதிகரிப்பதால் பணவீக்கத்திற்கு வழிவகுக்கிறது. வர்த்தகப் போர்கள் நடைபெறும் காலகட்டங்களில் பெரிய ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூடக் கரன்சி மதிப்பை குறைத்து நாணயப் போரை உருவாக்குகின்றன.
இந்திய ஏற்றுமதி
நாணய மதிப்பு நிலையானதாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பல நாடுகள் டாலர்களை வாங்குகிறார்கள். இறக்குமதிக்கும் இது வெகுவாக உதவுகிறது. உற்பத்தியில் போட்டியை உருவாக்க முனையும் போது, மத்திய வங்கிகள் விற்பனை செய்யும் அதிகப்படியான டாலர்களால் உள்ளூர் நாணயத்தின் மதிப்புக் குறைகிறது. டாலர்களின் விற்பனை அளவு மற்றும் அதற்குச் சமமான நிலையால் சரக்கு மற்றும் உற்பத்தித்துறை ஏற்றுமதியில் இந்தியாவில் வளர்ச்சி அடைகிறது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி 72
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 70 ஆக உள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மையைக் காப்பாற்றும் நோக்கில் ரிசர்வ் சில நடவடிக்கை எடுக்கும்போது இந்திய ரூபாயின் மேலும் வீழ்ச்சியடையாது எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். அதேநேரம் விலைவாசி உயரும் பட்சத்தில் 72 ஆக வீழ்ச்சியடையலாம் எனக் கூறப்படுகிறது.
தீர்வு என்ன
வர்த்தகப் போர்கள் தொடருமேயானால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கும். ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பணவீக்கத்துக்கு வழிவகுக்கும். தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் ரூபாய் மதிப்பு நிலையானதாக இருக்க வேண்டும். அமெரிக்கா வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தைகளில் இருந்து வெளியேறி வருகிறார்கள். இது நாணயத்தின் மதிப்பை மேலும் குறைக்கக்கூடும் என்பதால் ஆக்கப்பூர்வமான தீர்வுகள் தேவையாக இருக்கிறது.