நாடு கடத்தப்பட்டபின் விஜய் மல்லையா அடைக்கப்பட இருக்கும் மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையின் சிறை எண் 12-ல் சூரிய வெளிச்சம் போதுமான அளவு உள்ளது, தொலைக்காட்சி வசதி உள்ளது போன்றவற்றைக் காட்டும் வீடியோவை இந்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, லண்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
முன்னதாக மனிதர்கள் இருக்கமுடியாத சூழலில் மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலை இருப்பதாக விஜய் மல்லையா வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வீடியோ
10 நிமிடம் ஒடக்கூடிய இந்த வீடியோவில் சிறை எண் 12-ல் உள்ள அனைத்து வசதிகளும் காட்டப்பட்டுள்ளது. இந்திய சிறைகள் மனிதர்கள் இருக்கமுடியாத சூழலில் இருப்பதாக மல்லையா தரப்பு முன்வைத்த வாதத்தை முறியடிக்கும் விதத்தில் இந்த வீடி
வசதிகள்
தொலைக்காட்சி வசதி, தனிக் கழிப்பிட வசதி, துணி துவைக்கும் வசதி போன்றவை இந்த சிறையில் உள்ளதாக வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. தேவையான அளவுக்கு சூரிய ஒளி அறைக்குள் வருவதாகவும் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. நூலகத்தை பயன்படுத்துதல், நடை பயிற்சிக்கான இடம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
சிபிஐ
இந்திய சிறைகள் சுகாதாரமானவையா என பிரிட்டன் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் இந்த ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பித்துள்ளது. சிறையில் உள்ள மருத்துவ வசதிகள் தொடர்பான தகவல்களும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
சூரிய வெளிச்சம்
மல்லையா அடைக்கப்பட்டிருக்கும் அறை கிழக்கு நோக்கியது என்பதால் போதுமான அளவுக்கு சூரிய வெளிச்சம் அறையை வந்தடைவதாகவும் சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.'
சிபிஐ
முன்னதாக இந்த சிறைச்சாலை மனிதர்கள் இருப்பதற்கு ஏற்றவகையில் உள்ளது என்பதை நிரூபிக்கும்வகையில் சிறை எண் 12-ன் புகைப்படங்களை லண்டன் நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பித்திருந்தது. அவற்றை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் தற்பொழுது வீடியோ ஆதாரத்தை சிபிஐ சமர்ப்பித்துள்ளது.
முக்கிய குற்றவாளிகள்
மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையின் 12-ம் எண் அறை மிக முக்கிய குற்றவாளிகளை அடைத்துவைக்கும் அறையாகும். உயிருக்கு அச்சுறுத்தல் உடைய குற்றவாளிகள் மற்றும் பிறர் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் குற்றவாளிகள் போன்றோர் பொதுவாக இந்த அறையில் அடைக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு கடத்தும் வழக்கு
மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில் இந்தியாவுக்கு சாதகமாக நீதிபதி தீர்ப்பளிக்கும் பட்சத்தில், பிரிட்டன் உள்துறை செயலர் மல்லையாவை நாடு கடத்தும் உத்தரவில் 2 மாதங்களுக்குள் கையெழுத்திடுவார். இருப்பினும் நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய 2 தரப்புக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்துக்கள்
முன்னதாக மல்லையாவின் 1.15 பில்லியன் பவுண்ட் சொத்துகளைக் கைப்பற்ற 13 இந்திய வங்கிகளின் கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி மல்லையா மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த உத்தரவுக்கு தடை விதிக்க பிரிட்டன் நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.