எரிபொருள் விலை உயர்வு, வரலாறு காணாத ரூபாய் மதிப்பின் தொடர் வீழ்ச்சி போன்ற காரணங்களால் நிதிநெருக்கடியைச் சந்தித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், ஜூன் 30 ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் மோசமான இழப்புகளை எதிர்கொண்டுள்ளது.
நிகர இழப்பு 1,323 கோடியாக இருப்பதாக அந்த நிறுவனம் பதிவு செய்துள்ளது கடந்த ஆண்டு இதே காலாண்டில், 53 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியிருந்தது.
நட்டம்- லாபம்
காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவில் 31 விழுக்காடாக இருந்த எரிபொருள் செலவுகள், கடந்த ஆண்டு 52 விழுக்காடு உயர்ந்து 1,524 கோடியில் இருந்து 2,332 கோடி ரூபாயாக அதிகரித்தது.அதேவேளை ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் 5,954 ரூபாயில் இருந்து 6,067 கோடி ரூபாயாக லாபம் உயர்ந்தது.
செலவு குறைப்பு
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2,000 கோடி அளவுக்குச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்டிருக்கிற ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், பராமரிப்புச் செலவுகள், விற்பனை மற்றும் விநியோக செலவுகள், எரிபொருள் விகிதம், கடன் மற்றும் வட்டி ஆகிய செலவினங்களைக் குறைக்க முடிவு செய்தது.
முக்கியத் திட்டங்கள்
வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு இரண்டு முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாகக் கூறிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல், மூலதனத்தை உட் செலுத்தவும், நீண்ட கால நிலையான நிதி நிலையைக் கையாளவும் முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
பொதுவான பாதிப்பு
எரிபொருள் விலை உயர்வின்போது குறைந்த கட்டணத்தில் விமானச் சேவையை வழங்குவது போன்ற காரணங்களால் ஜெட் ஏர்வேஸ் உட்பட இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் செயல் அதிகாரி வினய் துபே கூறினார்.
நம்பிக்கை
பயணிகளைத் திருப்திப்படுத்துவதுடன் செலவுகள் குறைக்கவும், வருவாயை அதிகரிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர்,சவால்களை எதிர்கொள்ள உதவும் என்று கூறினார். செயல்பாட்டுக்கு வந்துள்ள புதிய முயற்சிகளால் பாசிட்டாவான மாற்றங்கள் தென்படத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.