7வது சம்பள கமிஷன் கீழ் மோடி அரசு 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை 2 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 7 சதவீதம் அகவிலைப் படியை பெற்று வரும் நிலையில் அது 9 சதவீதமாக உயர்கிறது. இதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. இந்த அகவிலைப் படியானது ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தினைப் பொருத்துக் கணக்கிடப்படும் என்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
எப்போது முதல் அகவிலைப் படி உயர்வு?
மத்திய அரசு அறிவித்துள்ள இந்த அகவிலைப் படி உயர்வானது அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 2018 ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
செலவு
அகவிலைப் படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 6112.20 கோடி ரூபாயும், ஒரு நிதி ஆண்டுக்கு 407.80 கோடி ரூபாயும் கூடுதல் செலவாகும் என்று தெரிவித்துள்ளனர்.
பயனாளிகள்
அதே நேரம் இந்த அகவிலைப் படி உயர்வின் காரணமாக 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 62.03 லட்சம் ஓய்வூதியதார்கள் பயனடைய உள்ளனர்.
அடிப்படை சம்பள உயர்வு
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 2.57 சதவீத ஃபிட்மெண்ட் சூத்திரத்தின் கீழ் அடிப்படை ஊதிய உயர்வைப் பெற்றுள்ளனர். ஆனால் மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் 18,000 ரூபாயாக உள்ள அடிப்படை ஊதியத்தினை 26,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இது 21,000 ரூபாய் வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பீகார்
மறு பக்கம் பீகாரில் உள்ள சில அரசு பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர். மோடி அரசும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லா அரசு ஊழியர்களுக்கும் 7 வது சம்பளம் கமிஷனின் பரிந்துரையின் படி ஊதியம் மாற்றி அமைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.