மெட்ரோ ரயில்களில் பயணிக்கச் செல்லும் போது அதற்கான டோக்கன் அல்லது ரீசார்ஜ் கார்டினை பயன்படுத்தினால் மட்டுமே பயணம் செய்ய முடியும். அதனை மேலும் மெருகேற்றி வங்கி டெபிட் கார்டினை காட்டிவிட்டு மெட்ரோவில் பயணம் செய்யக்கூடிய தொழில்நுட்பம் குறித்துக் கடந்த சில மாதங்களாக மத்திய அரசு விவாதித்து வருவதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
விவாதம்
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தில் நடைபெற்ற இந்த விவாதமானது விரைவில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்திடமும் நடைபெற உள்ளது.
எப்படி?
தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் மின்னணு முறையில் ஃபாஸ்ட் டேக் முறை பயன்பாட்டில் உள்ள நிலையில் அதே போன்ற ஒரு மெட்ரோ ரயில் பயணத்திற்கு அறிமுகம் செய்யலாம் என்று விவாதம் எழுந்த போது இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
எப்போது அமலுக்கு வரும்?
இந்த விவாதங்கள் எல்லாம் தற்போது தான் துவங்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்ய 2 மாதங்கள் அல்லது அதற்கும் மேலும் காலதாமதமாகும் என்றும் கூறப்படுகிறது.
பயனர்கள்
இந்தியாவில் விசா, மாஸ்டர், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் இந்தியாவின் ரூபே டெபிட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் ஜூன் மாதம் வரையில் 944 மில்லியன் டெபிட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதாகவும் அதில் 289 மில்லியன் கார்டுகள் எஸ்பிஐ வங்கிக்குக் கீழ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டோல் நிலையங்கள்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் நிலையங்களில் தேசிய மின்னணு டோல் வசூல் முறையின் கீழ் வாகனங்களில் ஃபாஸ்டேக் எனப்படும் ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்னுட்பம் பொருத்தப்பட்டு வங்கி கணக்கில் இருந்து நேரடியாகப் பணம் பெற்றுக்கொண்டு வாகனங்களை நிற்காமல் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.