மத்திய அரசு புதன்கிழமை பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தில் புதிய மாற்றங்களைச் செய்து அறிவித்துள்ளது. அதன் மூலம் இது வரை ஒரு தற்காலிக வங்கி கணக்குத் திட்டமாக இருந்த வந்த ஜன் தன் யோஜனாவை முடிவில்லா திட்டமாக மாற்றியுள்ளனர்.
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ஜன் தன் யோஜனா திட்டத்திற்குக் கிடைத்த வெற்றிகரமான வரவேற்பினை அடுத்து இந்தத் திட்டத்தினை முடிவில்லா திட்டமாக மாற்றுவதாகத் தெரிவித்துள்ளார். எனவே இந்தத் திட்டத்தின் கீழ் எப்போது வேண்டுமானாலும் கணக்கினை திறந்து வாழ் நாள் முழுவதும் பயன்படுத்த முடியும். இன்னும் பல வருடத்திற்கு பிறகும் இந்த சேமிப்பு கணக்கை திறக்கலாம்.
ஒவர் டிராப்ட்
ஜன் தன் யோஜனா சேமிப்புக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் ஒவர் டிராப்ட் முறையில் 5,000 ரூபாய் வரை பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டு வந்தது. புதன் கிழமை முதல் ஒவர் டிராப்ட் வரம்பினை 5,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக மாற்றி அறிவித்துள்ளன.
வட்டி விகிதம் எவ்வளவு?
ஓவர் டிராப்ட் கீழ் சேமிப்புக் கணக்கில் இருந்து கூடுதலாகப் பணத்தினை எடுத்துப் பயன்படுத்தும் போது அந்தப் பணத்திற்கு 12 முதல் 20 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தினைக் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
நிபந்தனை ஏதுமின்றி ஓவர் டிராப்ட்
ஜன் தன் சேமிப்புக் கணக்குகளுக்கு 2,000 ரூபாய் வரை நிபந்தனை ஏதுமின்றி ஓவர் டிராப்ட் அளிக்கப்படும் என்றும் இதற்காக 32,000 கோடி ரூபாய் செலவு செய்ய மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாகவும், இது பொருளாதாரத்தினை ஊக்குவிக்கக் கூடிய ஒரு திட்டம் என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடி
2014-ம் ஆண்டுப் பிரதமர் மோடி அவர்களால் நாட்டு மக்களுக்கு நிதி மேலாண்மை குறித்துப் புரிதலை கொண்டு வர வங்கி கணக்கு, காப்பீடு மற்றும் பென்ஷன், மானியம் போன்றவற்றை நேரடியாகப் பெற இந்த ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது.
சேமிப்புக் கணக்குகள்
ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 32.41 கோடி நபர்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளதாகவும் 81,200 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆதார்
அருண் ஜேட்லி இந்தச் சேமிப்புக் கணக்கினை திறந்தவர்களில் 53 சதவீத நபர்கள் பெண்கள் என்றும், 83 சதவீதத்தினர் ஆதாருடன் இந்தக் கணக்குகளை இணைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சை
பண மதிப்புக் காலத்தில் ஜன் தன் யோஜனா சேமிப்புக் கணக்குகள் கீழ் முறைகேடாகப் பழைய ரூபாய் நோட்டுகள்ள் மாற்றப்பட்டுள்ளதாக 60 சதவீத கணக்குகள் வரை விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.