ரூபாய் மதிப்பு கடந்த சில வாரங்களாக மிகப் பெரிய அளவில் சரிந்து புதன்கிழமை டாலர் ஒன்றுக்கு 71.86 ரூபாய் என்றுள்ளது. இந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூபாய் மதிப்பு 13 சதவீதம் வரை சரிந்துள்ளது.
மறு பக்கம் மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் ரூபாய் மதிப்பு சரிவை குறைக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதே நேரம் செய்திகளில் என்ஆர்ஐ பத்திரங்களை வெளியிட்டு ரூபாய் மதிப்புச் சரிவினை குறைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
என்ஆர்ஐ பத்திரங்கள் எதற்கு?
என்ஆர்ஐ பத்திரங்கள் மூலம் மத்திய அரசு வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் இந்தியர்களை 3 முதல் 5 வருடங்கள் வரை முதலீடு செய்ய வைத்து அந்நிய செலாவணி இருப்பினை அதிகரித்து ரூபாய் மதிப்பைச் சரிவில் இருந்து விடுபட வைக்கும் முயற்சி ஆகும்.
இந்தியா என்ஆர்ஐ பத்திரங்களை வெளியிடுவதால் என்ன பயன்?
இந்தியா என்ஆர்ஐ பத்திரங்களை வெளியிட்டால் டிசம்பர் மாத காலாண்டிற்குள் 30 முதல் 35 பில்லியன் வரை அந்நிய செலாவணியைப் பெற உதவும். இதே போன்று 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட என்ஆர்ஐ பத்திரங்கள் கீழ் 30 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி பெறப்பட்டுள்ளது.
எப்படி இந்த என்ஆர்ஐ பத்திரங்கள் வெளியிடப்படும்?
என்ஆர்ஐ பத்திர திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தால் அங்கு உள்ள இந்திய வங்கி கிளைகளில் என்ஆர்ஐ-கள் தங்களது சம்பளத்தினை அந்நிய செலாவணியாக முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதன் மூலம் அந்த அந்நிய செலாவணி இந்தியாவிற்கு வரும்.
என்ஆர்ஐ-களுக்கு என்ன பயன்?
என்ஆர்ஐ பத்திரங்களில் முதலீடு செய்யும் போது இந்திய சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதை விடக் கூடுதல் லாபம் அளிக்கப்படும். இதனை எளிதாக இந்திய பணமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
கச்சா எண்ணெய் இறக்குமதி?
தற்போது கச்சா எண்ணெய்யை அரபு நாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் நிலையில் அங்கு உள்ளவர்கள் அதிகளவில் என்ஆர்ஐ பத்திரங்கள் திட்டம் கீழ் முதலீடு செய்யும் போது இந்தியாவில் உள்ள அந்நிய செலாவணி இருப்பிற்குப் பாதிப்பு மிகப் பெரிய அளவில் குறையும். கச்சா எண்ணெய் இறக்குமதிக்குப் பாதிப்பும் இருக்காது.
இதற்கு முன்பு எத்தனை முறை என்ஆர்ஐ பத்திரங்கள் வெளியிடப்பட்டது?
இந்திய அரசு இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு என்ஆர்ஐ பத்திரங்களை வெளியிட்டு 5 பில்லியன் டாலர் முதலீட்டினை பெற்றது. அதில் 4.8 பில்லியன் டாலரினை போக்ரான் அணு ஆயுத சோதனைக்காகப் பயன்படுத்தியது. அணு ஆயுத சோதனை நடத்திய போது இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது முறையாக 2000-ம் ஆண்டு 5 பில்லியன் டாலரும், 2001-ம் ஆண்டு 5.5 பில்லியன் டாலரும் என்ஆர்ஐ பத்திரங்கள் கீழ் திரட்டப்பட்டது. கடைசியாக 2013-ம் ஆண்டு 30 பில்லியன் டாலர் என்ஆர்ஐ பத்திர திட்டங்கள் கீழ் பெறப்பட்டது.