பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சக கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் ஊதியத்தினை உயர்த்த அனுமதி அளித்துள்ளனர்.
இந்த ஊதிய உயர்வினால் மத்திய அரசுக்கு 2018 அக்டோபர் முதல் மார்ச் 2020 வரையிலான காலகட்டத்திற்கு 10,649.41 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பயனடையும் ஊழியர்கள் எண்ணிக்கை
நாடு முழுவதும் 24 லட்சம் அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த உதிய உயர்வில் பயனடைய உள்ளனர்.
மோடி
பிரதமர் மோடி அவர்கள் செப்டம்பர் 11-ம் தேதி அங்கன்வாடி ஊழியர்களின் ஊதிய உயர்வினை அதிகரிப்போம் என்று உறுதி அளித்ததன் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு எவ்வளவு?
புதிய உதிய உயர்வின் படி தற்போது மாதம் 3,000 ரூபாய் ஊதியமாகப் பெற்று வந்தவர்கள் 4,500 ரூபாயும், 2,200 ரூபாய் ஊதியம் பெற்று வந்தவர்கள் 3,500 ரூபாயும் ஊதியமாகப் பெற உள்ளனர்.
அங்கன்வாடி உதவியாளர்கள் சம்பளத்தினையும் 1,500 ரூபாயில் இருந்து 2,250 ரூபாயாக உயர்த்தியுள்ளனர்.
ஊக்கத்தொகை
ஒவ்வொரு மாதமும் அங்கன்வாடி உதவியாளர்களின் செயல் திறனைப் பொருத்து 250 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
போராட்டம்
சென்ற ஜூலை மாதம் சென்னையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது போன்று நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியதும் குறிப்பிடத்தக்கது.