சமீபத்தில் ப்ளூம்பெர்க் தன்னுடைய அறிக்கையில் இந்தியா போன்ற மிகப் பெரிய நாடுகளுக்கு 210 பில்லியன் டாலர் Stressed Asset இருப்பது மொத்த வங்கிச் சூழலையே கேள்விக் குறி ஆக்கி விடும். எனவே இந்த Stressed Asset-களை மீட்கச் அதிரடியாக திட்டமிடுவது தான் இந்தியாவுக்கு நல்லது என்று அடிக்கோடிட்டுக் காட்டி இருக்கிறது.
Stressed Asset
ஒரு வங்கியில் வாராக் கடன் என்று அழைக்கப்படும் NPA தொகை, கடன் மறு சீரமைப்புத் திட்டம் மூலம் மாற்றியக் கடன் தொகை Restructured loan, Written off Assets என்று சொல்லப்படும், இனிமேல் எப்படியும் இந்த கடன்கள் திரும்ப வரவே வராது என்று சொல்லி தண்ணீர் தெளித்த சொத்துக்கள். இந்த மூன்றையும் கூட்டினால் கிடைப்பது தான் Stressed Asset.
என்பிஏ
Non Performing Asset என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒருவர் வாங்கிய கடனுக்கான வட்டியோ, அசலோ 90 நாட்களுக்குத் தொடர்ந்து கட்டவில்லை என்றால் அந்த கடனை என்பிஏ என்று அறிவித்துவிடுவார்கள். அப்படி இந்திய வங்கிகளுக்கு மட்டும் இருக்கும் வாராக் கடன் சொத்துக்கள் சுமாராக 23,200 கோடி ரூபாய்.
Restructured loan
ஒரு நிறுவனத்துக்கு கடன்கொடுக்கிறார்கள். அந்த நிறுவனத்தால் தொடர்ந்து 90 நாட்களுக்கு அசலோ வட்டியோ கட்டவில்லை. அதனைத் தொடர்ந்து அவர்களுடைய கடனுக்கான வட்டி விகிதத்தில் குறைப்பு, கடனைக் கட்ட வேண்டிய கால அளவில் கொஞ்சம் அதிக மாதங்கள் அல்லது ஆண்டுகள் தருவது.... என்று மொத்தக் கடன் அமைப்பையே மறு சீரமைப்பார்கள். இது தான் கடனை வசூலிப்பதற்கான கடைசி வாய்ப்பு. இதற்கு சிறந்த உதாரணம் அனில் அம்பானி தன் கடன்களை அடைக்க சொத்துக்களை ஆர்.காம் நிறுவனத்தையே விற்றுக் கட்டுவது.
Written off Assets
இந்த ரக கடன்கள் மேலே சொன்ன இரண்டையும் முயற்சி செய்து பார்த்துவிடுவார்கள். வாங்கிய கடனுக்கு ஏதாவது சொத்து இருந்தால் அதை விற்று வங்கிக்கு தேவையான பணத்தை மீட்டுக் கொள்ள முயற்சிப்பார்கள். அதற்கு பிறகு கடனாளியிடம் இருந்து வாங்கவோ, விற்கவோ ஒன்றும் இல்லாத போது, அந்தக் கடனை திரும்பி வாங்கவே இயலாத கடன் என்று தங்களின் நிதி நிலை அறிக்கைகளிலேயே தெரிவித்து விடுவார்கள். இப்படிப் பட்ட கடன்கள் நம் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக நிறையவே இருக்கின்றன. இதற்கு சிறந்த உதாரணம் மல்லையா கடனை கட்டாமல் டாட்டா காட்டியது.
இந்தியாவில்
இந்திய நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படும் வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பித் தராதவை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வாங்கியக் கடன்களில் திருப்பித் தராதவை என்று அனைத்தையும் சேர்த்தால் 210 பில்லியன் டாலர் வருகிறது. இந்திய ரூபாயில் 14,00,000 கோடி ரூபாய். சுருக்கமாக 14 லட்சம் கோடி ரூபாய்.
இந்திய வங்கிகள்
இந்திய வங்கிகள் மட்டும் கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியாமல் Stressed Asset ஆக சுமார் 145 பில்லியன் டாலர் கடனை வாங்க காத்திருக்கிறார்கள். இந்திய ரூபாயில் 10 லட்சம் கோடி ரூபாய்.
இந்த தொகையினை முழுமையாக மீட்பது சற்று கடினமான காரியம் தான். ஆனால் இதில் ஒரு பெரும்பகுதியை உடனடியாக மீட்டால், பெட்ரோல் , டீசலுக்கு அடுத்த சில வருடங்கள் வரியே விதிக்காமல் இருக்கலாம்.