எப்எம்சிஜி துறையில் மிகப் பெரிய வெற்றியைப் பதஞ்சலி நிறுவனம் பெற்றுள்ள நிலையில் சமுகச் சேவைக்காக 1 லட்சம் கோடி ரூபாயினைச் செலவு செய்ய இருப்பதாகப் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பெண்கள் அமைப்பு நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற யோகா குரு பாபா ராம்தேவ் தங்களது சமுகச் சேவை திட்டங்களில் மருத்துவம், ஆய்வு, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் 1 லட்சம் கோடி ரூபாயினைச் செலவு செய்ய இருப்பதாகக் கூறியுள்ளார்.
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவன
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தற்போது விவசாயம் மற்றும் பதப்படுத்திய உணவு விற்பனை உள்ளிட்ட துறையில் கவனம் செலுத்தி வருகின்றது என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
பதஞ்சலி எப்எம்சிஜி பிரிவில் பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. மறு பக்கம் சூரிய மின்சாரம் உற்பத்தித் துறையிலும் பதஞ்சலி கவனம் செலுத்தி வருகிறது.
இயற்கை விவசாயம் மற்றும் பால்
இயற்கை விவசாயத்தினைப் பதஞ்சலி ஊக்குவிக்கும். சென்ற மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், பிற போட்டியாளர்களை விடக் குறைவான விலைக்குப் பால விற்கப்படும் என்றும் பாபா ராம்தேவ் குறிப்பிட்டுள்ளார்.
பதஞ்சலியின் வருங்காலத் திட்டங்கள்
2019 மார்ச் மாதத்திற்குள் பதஞ்சலி நிறுவனம் 100 புதிய கடைகளைத் திறக்க முடிவு செய்துள்ளது. 2016-2017 நிதி ஆண்டில் 10,561 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்த பதஞ்சலி நிறுவனம் அதனை 30,000 கோடி ரூபாயாக அதிகரிப்பதை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகிறது. மேலும் உலகின் நம்பர் 1 எப்எம்சிஜி நிறுவனமாகப் பதஞ்சலியை உயர்த்துவதே தனது நோக்கம் என்றும் பாபா ராம்தேவ் கூறி வருகிறார்.
பங்கு சந்தை
பதஞ்சலி நிறுவனம் ஒரு சேவை நிறுவனம் என்றும் அதனால் பங்கு சந்தையில் வெளியிடும் எண்ணம் ஏதுமில்லை என்றும் வெளிநாட்டு முதலீடுகளையும் பெற மாட்டோம் என்று பாபா ராம்தேவ் பல முறை தெரிவித்துள்ளார்.