பாகுபலி சினிமாவை பார்க்காதவர்கள் மனிதனே கிடையாது என்கிற ரேஞ்சில் பார்த்து, எழுதிப் , பேசி, பாடி, டிவிட்டி... இப்போது தான் ஓய்ந்திருக்கிறார்கள். ஒரு சினிமாவாக, பாகுபலி 2 மட்டும் 2,000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்து கொடுத்தது. படம் எடுத்தவர்களுக்கும் சரி, நடித்தவர்களுக்கும் சரி நல்ல லாபம், நல்ல பெயர் எல்லாமே ப்ளஸ் தான்.
பாகுபலியின் பிடி
ஆனால் உலகம் இன்னும் பாகுபலியின் பிடியில் இருந்து முழுமையாக விடுபட வில்லை. பாகுபலி பார்த்தவர்கள் மனதில் இன்னும் மகிழ்மதியின் ஏதோ ஒரு துரும்பு மீண்டும் அவர்களை மகிழ்மதிக்கே அழைத்து வருகிறது. பல்வாள்தேவனின் வில்லனிஸம், பிரபாஸின் முரட்டுத்தனம், அனுஷ்காவின் அழகு, ராஜமாதாவின் கம்பீரம் என்று எதையோ இந்த உலகம் பாகுபலி பற்றி அசை போட்டுக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கு கூகுள் சொல்லும் யூடியூப் கணக்குகளே சாட்சி. பாகுபலி வெளியாகி 16 மாதங்கள் கடந்த பின்னும் இன்னும் ஒரு 8 - 10 சதவிகிதத்தினர் பாகுபலியைத் தேடித் தேடிப் பார்க்கிறார்கள். பாகுபலி 2 இடைவேளை சீன், அனுஷ்காவின் வாள் வீச்சு, கட்டப்பா பாகுபலிய கொன்ற சீன், இல்ல இல்ல எனக்கு முழு படமும் ஹெச்.டி-ல வேண்டும்... என்று யூடியூபைக் கேட்கிறார்கள் மக்கள்.
பிசினஸ் சமூகம்
ஆனால் பிசினஸ் சமூகம் பாகுபலியை ரசிப்பதோடு மட்டும் இல்லாமல் அதை வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கிறது. அந்த பெயரை ஒரு தனி மனிதனின் பெயராகப் பார்க்கவில்லை. ஒரு திரைக் கதாபாத்திரமாக சத்தியமாகப் பார்க்கவில்லை. இன்று பிறந்த நாள் கொண்டாடும் ராஜமெளலியின் கலைப் படைப்பாகப் பார்க்க வில்லை, இந்திய சினிமாவை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்ற படைப்பாக பார்க்கவில்லை.... ஒரு அற்புதமான பிராண்டாகப் பார்த்தது.
பிராண்டா...?
ஆம்... ஒரு அற்புதமான, பெரிய பிராண்டாகப் பார்க்கிறது. ஏன் தெரியுமா...? ஒரு பெயரை மக்கள் மனதில் தைக்கும் படி இருக்க வைப்பது அத்தனை எளிதல்ல. நீங்கள் வேண்டுமானால் உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் பயன்படுத்தும் ஊதுபத்தியின் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம். சரி அடுத்து அப்படியே நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடைகளைச் சொல்லுங்கள் பார்ப்போம். பெருசோ, சிருசோ எல்லாம் பிராண்டு தான். அப்படி நடு மனதில் நச்சென நாற்காலி போட்டு உட்கார்ந்தது பாகுபலி. இது தான் ஒரு பிராண்டின் மிகப் பெரிய வெற்றி. அதோடு 2017-ம் ஆண்டு இந்திய ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள்
அதிகம் ரியாக்ட் செய்த வார்த்தை பாகுபலி,
அதிக போஸ்ட் போட்ட வார்த்தை பாகுபலி,
அதிகம் டிரெண்டான வார்த்தை பாகுபலி,
பாகுபலி என்கிற ஒரு வார்த்தையை வைத்து எத்தனை பேர் எவ்வளவு லாபம் பார்த்தார்கள் என்பதை கணிக்க முடியாமல் ஃபேஸ்புக்கே திணறியது. அந்த அளவுக்கு பாகுபலி ஒரு பிரம்மாண்ட பிராண்ட். இதை Facebook India's analysis of 2017 உறுதி செய்கிறது.
எப்படி காசு பார்த்தார்கள்
பொம்மைகள், சிவகாமியின் கதை, காமிக் புத்தகங்கள், ப்ரீ சீக்வல் என்று சொல்லப்படும் பின்னோக்கிச் செல்லும் பாகுபலியின் கதையை ஒளிபரப்ப முன் வந்த நெட் ஃப்ளிக்ஸ் மற்றும் அமேஸான் ப்ரைமில் அனிமேஷன் சீரிஸ், ஜாப்பமிஸ், சீனம், கொரியம் பேசிய பாகுபலி, ஜப்பானிய டிவிடிக்களில் அனிமேஷன் சீரிஸ், விளம்பரங்கள் என அள்ளியது பாகுபலி.
லில்லி புட் ஹப்
இந்த நிறுவனம் தான் பாகுபலி சினிமாவின் கேரக்டர்களை எல்லாம் அப்படியே பொம்மைகள் ஆக்கி அமேஸானில் விற்று காசு பார்த்தது. இதற்கு முறையான உரிமங்களை எல்லாம் விலை கொடுத்து வாங்கி, வேறு யாரும் பாகுபலி கதாபாத்திரங்களை பொம்மையாக வெளியிட முடியாத படிக்கு வேலை பார்த்திருக்கிறது. அவர்களின் பாகுபலி பொம்மைகளை கீழே வீடியோவிலும் மேலே படத்திலும் பாருங்களேன்.
நாவல்
ஒரு பொருள் ஓடினால் தான் அதை மீண்டும் கடைகாரர்கள் வாங்கி வைப்பார்கள். பாகுபலி ஒரு ஓடும் சரக்கு. அதை சார்ந்த கதைகளும் கல்லா கட்டும் என்று கணித்தே "The Rise of Sivagami" என்கிற பெயரில் ஆனந்த் நீலகண்டன் ஒரு நாவலை வெளியிட்டார். இந்த நாவல் பாகுபலி திரைப்படத்தில் வரும் சிவகாமி தேவியின் கதையாகவே இருந்தது. அவள் எப்படி ஒரு வலிமையான ராஜமாதா ஆனால் என்பதை தன் கற்பனையின் எல்லைகளை வளைத்து வரித்து எழுதி இருப்பதாக ரிவ்யூக்கள் சொல்கின்றன. அந்த புத்தகமும் சிறப்பாக அமேஸானில் விற்று கல்லா கட்டியது. இவர் Asura: Tale of the Vanquished, Ajaya: Roll of the Dice, Ajaya: Rise of Kali போன்ற ஆங்கிலப் நாவல்களை எழுதியவர். இவரின் பாகுபலி சார்ந்த புத்தகத்துக்கு பல்வேறு பத்திரிகைகள் பிரம்மாண்ட ரிவ்யூ கொடுத்தன. The Hindu பத்திரிகை இந்த நாவலுக்குக் கொடுத்த ரிவ்யூவைப் படிக்க:
சீன, ஜப்பானிய, கொரிய மொழிகளில் பாகுபலி
பாகுபலி உள்நாட்டில் கட்டிய கல்லாவே பலமான உச்சங்களைத் தொட்டிருந்தது. அது வரை இந்திய சினிமாக்கள் காணாத பாக்ஸ் ஆஃபீஸ் உச்சம். வெளிநாட்டுச் சந்தைகளை கவனிக்காமல் இல்லை. இருப்பினும் அதில் உள்ள மொழி சிக்கல்களையும் கருத்தில் எடுத்துக் கொண்டது பாகுபலி டீம். விளைவு சீனம், ஜாப்பனீஸ், கொரியம் பேசும் பாகுபலியை அந்தந்த நாடுகளுக்கு கொண்டு சென்றார்கள். உண்மையாகவே 100 நாள் ஓடி வெற்றி விழா கண்டது. இந்திய சினிமாவும் அதில் புதிய உச்சங்களைத் தொட்ட பெருமை கொண்டது.
ப்ரீ சீக்வல்
நெட் ஃப்ளிக்ஸ் (Net Flix), அப்போது தான் இந்தியாவில் தொடங்கி இருந்த காலம் என்று சொல்லலாம். தெளிவாக திட்டமிட்டு பாகுபலியைப் பற்றித் திரையில் சொல்ல முடியாத அத்தனை விஷயங்களையும் ஒரு ப்ரீ சீக்வல் கதையாக தன் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியிட்டது. இதில் அமெஸான் ப்ரைம் வீடியொக்களும் அடக்கம். அவர்களும் இதே ஸ்ராட்டஜியை பின்பற்றினார்கள்.
பாகுபலி மங்கா
மங்கா காமிக் நிறுவனம் ஜப்பானில் இருக்கிறது. இது அமெரிக்காவில் எப்படி வால்ட் டிஸ்னி, மார்வெல் போன்ற ஜாம்பவான்கள் இருக்கிறார்களோ அது போல மங்கா, ஜப்பானின் மார்வெல். இவர்களே முன் வந்து "பாகுபலியை எங்கள் காமிக்-ல் பயன்படுத்திக் கொள்கிறோம்" என்றது. பின் ஜப்பானில் அதை வைத்து ஒரு காமிக் தொடர் வசூல் வேட்டையை நடத்தி வெற்றி விழாவே கொண்டாடியது மங்கா நிறுவனம்.
அனிமேஷன் சீரிஸ்
ஜப்பானில் காமிக், ஜப்பானியம் பேசிய பாகுபலி போதாமல் அவர்களே அனிமேஷன் சீரிஸ்களையும் செய்து, டிவிடி-க்களில் அடைத்து விற்றார்கள். அதுவும் லாபம் தான். நம் ரஜினிக்கு எப்படி ஜப்பானிய ரசிகர்கள் விழுந்து விழுந்து கவனித்தார்களோ, அதே போல் பாகுபலி கதா பாத்திரங்களையும் அலங்காரம் செய்து கொண்டு தெருக்களில் திரியும் அளவுக்கு பாகுபலி அவர்கள் வாழ்க்கையோடு கலந்தது. இப்படிப் பல பிசினஸ் முறைகளில் பாகுபலி என்கிற ஒற்றை வார்த்தை மூலம் சுமார் 10,000 கோடி ரூபாயாவது காசு பார்த்திருப்பார்கள் என பிராண்ட் அனலிஸ்டுகள் தெரிவித்து இருக்கிறார்கள். இது போதாமல் சன்ஃபீஸ்ட் பிஸ்கட்டுக்கு பாகுபலியே வந்து சன்ஃபீஸ்ட் சாப்பிடச் சொன்னதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த தொகை இன்னும் கூடலாம்.
ராஜமெளலி
இதில் என்ன வேடிக்கை என்றால் அந்த கதாப்பாத்திரத்தை உருவாக்கிய ராஜமெளலிக்கு எவ்வளவு தொகை கிடைத்திருக்கும் என்கிற தகவல்கள் இன்று வரை வெளியாகவில்லை. எது எப்படியோ கடைசியாக பாகுபலியின் படைப்பாளியான எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு நம் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்னும் பல படைப்புகளை எதிர்பார்க்கிறோம் ராஜமெளலி சார்.