இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் நட்டம் அடைந்து வருவதற்கு விமான எரிபொருள் கட்டணம் அதிகமாக இருப்பதே காரணம் என்றும் கூறப்படுகிறது. மறு பக்கம் கடந்த சில மாதங்களாகக் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் மட்டும் இல்லாமல் விமான எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது.
எனவே இந்த விலை உயர்வின் தாக்கத்தினைக் குறைக்க அன்மையில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையினை 2.5 ரூபாய் வரை குறைத்தது.
விமான நிறுவனங்களும் நீண்ட காலமாகவே விமான எரிபொருள் மீதான வரியினைக் குறைக்க வேண்டும் என்று கூறிவந்த நிலையில் அக்டோபர் 11ம் தேதி முதல் கலால் வரியினை மத்திய அரசு குறைத்துள்ளது.
வரிக் குறைப்பு
விமான எரி பொருள் மீதான கலால் வரி 14 சதவீதமாக இருந்து வந்த நிலையில் 3 சதவீதம் குறைத்து 11 சதவீதமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வரலாறு காணாத உயர்வு
2014-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு விமான எரிபொருள் விலை அக்டோபர் மாதம் தான் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.
டெல்லியில் விமான எரிபொருள் விலை இன்று கிலோ லிட்டர் 74,567 ரூபாய் எனவும் லிட்டர் ஒன்றுக்கு 74.56 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே மும்பையில் கிலோ லிட்டர் 74,177 ரூபாயாக உள்ளது.
தொடர் உயர்வு
சென்ற ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் விமான எரிபொருளின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இடையில் 2018 ஜூலை மாதம் மட்டும் சற்று குறைந்து இருந்தது.
சுங்க வரி
மத்திய அரசு சென்ற மாதம் விமான எரிபொருள் இறக்குமதி மீது 5 சதவீத சுங்க வரியை விதித்து விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு மேலும் செலவை அதிகரித்து வந்த நிலையில் தற்போது 3 சதவீதம் கலால் வரியைக் குறைத்துள்ளது
விமானப் பயணிகள் எண்ணிக்கை
இந்தியாவில் ஜனவரி - ஆகஸ்ட் இடைப்பட்ட காலத்தில் 913.95 லட்சம் நபர்கள் விமானத்தில் பயணித்துள்ளனர். இதுவே சென்ற ஆண்டு 754.11 லட்சமாக இருந்தது. விமானப் போக்குவரத்தினைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள் ஆகும். அதே நேரம் ஒரு சில விமான நிறுவனங்களை விட அனைத்தும் நட்டத்தில் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.