தாஜ் ஹோட்டல்கள், உலகம் முழுக்க பிரசித்த பெற்ற இந்திய ஹோட்டல் குழுமம். இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர் ஜாம்செட்ஜி டாடா காலத்தில் இருந்தே இயங்கி வரும் ஹோட்டல்கள். 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி நடந்த தாக்குதலில், தீவிரவாதிகளின் முதல் தாக்குதல் இலக்காக இருந்தது, அரபிக் கடல் ஓரம் ஒய்யாறமாக நின்ற மும்பை தாஜ் ஹோட்டல் தான். இப்போது அதே தாஜ், ஒரு அவமானகரமான செயலைச் செய்திருக்கிறது.
ஏன் தாஜ்க்கு வந்தார்கள்
அஸ்ஸாமைச் சேர்ந்த மூன்று முஸ்லிம்கள் ஒன்றாக அஸ்ஸாமின் தலைநகரான கெளஹாத்தீ தாஜ் ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்திருக்கிறார்கள். இம்ரான் ஹசன் லஷ்கர், சஹத் உத்தின் மற்றும் சஹித் இஸ்லாம் பர்ஹூயன். இந்த மூவரும் கெளஹாத்தி விமான நிலையத்தில் இருந்து தில்லி செல்ல இருந்த விமானத்தை சரியான நேரத்தில் பிடிக்க முடியாமல் விட்டுவிட்டார்கள். ஆகையால் அன்று இரவு அஸ்ஸாமிலேயே தங்கி இருந்து விட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதாகத் திட்டம்.
விவரம்
இம்ரான் ஹசன் லஷ்கர் ஒரு இந்திய ராணுவ அதிகாரி, பல் மருத்துவராக மனிபூரின் இம்பால் ராணுவ மருத்துவமனையில் பணியாற்றுகிறார். சஹத் உத்தின் பதர்பூரில் ஒரு கல்லூரியை நடத்தி வருகிறார். சஹித் இஸ்லாம் பர்ஹூயன் ஒரு ஆசிரியர்.
செக் இன்
மூவரும் ஒன்றாக விமான நிலையத்தில் இருந்து கெளஹாத்தி தாஜ் ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு வந்து அறை எண் 226-ல் தங்குகிறார்கள். இந்த அறைக்கு ஒரு எக்ஸ்ட்ரா கட்டில் போட 2000 ரூபாயும் கூடுதலாக கொடுக்கிறார்கள். வெளியே சென்று உலாவி விட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு ஹோட்டலுக்கு வருகிறார்கள். தாஜ் ஹோட்டல் முழுமையாக காவல் துறையினர் இருக்கிறார்கள். பிரச்னை புரிந்திருக்கும். மூன்று பேருக்கு பின்னும் ஹோட்டல் செக்யூரிட்டி மற்றும் காவல் துறையினர் பின் தொடர்கிறார்கள். அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் நேரடியாக அவர்கள் அறைக்கு செல்கிறார்கள்.
அவமதிப்பு
மீண்டும் மாலை 5 மணிக்கு வந்து ஏன் எக்ஸ்ட்ரா கட்டில் போடவில்லை என்று கேட்டதுக்கு சரியான பதில் இல்லை. திடீரென ஹோட்டல் சிஇஓ அழைக்கிறார். "உண்மைய சொல்லுங்க, நீங்க எல்லாம் யார், எந்த இயக்கத்த சேர்ந்தவங்க" என்று அந்த மூன்று இஸ்லாமியர்களையும் ஹோட்டல் ஊழியர்கள் மிரட்டுகிறார்கள். இந்த மூவரும் தங்களைப் பற்றி விவரமாகச் சொல்கிறார்கள். இந்த களேபரங்களை பதிவு செய்ய முன் வந்த ராணுவ அதிகாரியின் செல் போனை அருகில் இருந்தவர்கள் பிடுங்கிக் கொள்கிறார்கள். அதோடு நில்லாமல் போனை முழுமையாக பிரித்து மேய்ந்து சோதனை செய்கிறார்கள்.
போலீஸ் விசாரனை
இம்ரான் ஹசன் லஷ்கர், சஹத் உத்தின் மற்றும் சஹித் இஸ்லாம் பர்ஹூயன் மூன்று பேரின் பணப் பர்ஸ்கள் (Wallet), உடைமைகள் அனைத்தும் தலை கீழாக சோதனை செய்கிறார்கள். எல்லாம் முடிகிறது. காவல் துறை மன்னிப்பு கேட்டு கலைகிறது. அவரின் செல் போனை கடுமையாக பிடுங்கி சோதனையிட்டு ஹோட்டல் ஊழியர்கள் எதுவும் சொல்ல முடியாமல் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். இப்படி எல்லாம் முடிந்து இந்த மூன்று பேரும் தங்கள் அறைக்குச் செல்லும் போது இரவு 12.30 மணிக்கு மேல் இருக்கும். சுமார் 6 - 8 மணி நேரம் சோதனை என்கிற பெயரில் இந்த மூவரையும் அவமதித்திருக்கிறார்கள்.
இம்ரான் ஹசன் லஷ்கர்
இந்த களேபரங்களுக்குப் பிறகு தங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, தாங்கள் செலுத்திய பணத்தை திரும்பக் கேட்டிருக்கிறார்கள். தாஜ் குழுமம் திரும்பத் தரவில்லை. இது குறித்து தாஜ் ஹோட்டல் குழுமத்தின் செய்தி தொடர்பாளர் இந்திரானே புகான் "இப்போதைக்கு இதைப் பற்றி ஒன்று சொல்வதற்கு இல்லை. உண்மையிலேயே என்ன நடந்தது என்று தெரிந்து கொண்டு நாங்களே பத்திரிகையாளர்களை சந்திக்கிறோம்" என்று சொல்லி இருக்கிறார்.
அந்த மூன்று விருந்தினர்கள்
இப்போது வரை அவர்கள் தங்கள் மதத்தை வைத்து தங்களைத் தாக்கியதாகச் சொல்லவில்லை. ஒரு நாட்டுக்கு பாதுகாப்பு அவசியம் தான். ஆனால் அதற்கான விசாரணை முறை என ஒன்று இருக்கிறது. அந்த வரையறைகள் தான் எங்கள் விஷயத்தில் எல்லை மீறிப் போய்விட்டதாகச் சொல்கிறார்கள் அந்த மூவரும். "நாங்கள் ஒரு வாடிக்கையாளராக ஒரு ஹோட்டலுக்குச் சென்றோம், எங்களை சரியாக கவனிக்கவில்லை. எங்கள் பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும்" என்று தான் முறையிட்டார்கள் அதுவும் வழங்கப்படவில்லை. இப்போது இந்த மூவரும் தாஜ் ஹோட்டல் குழுமத்துக்கு எதிராக நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறார்கள். நியாயம் வெல்லட்டுமே.