இந்திய தொலைக் காட்சியில் ரொம்ப நாளாக ஓடிக் கொண்டிருக்கும் பெட்ரோல் டீசல் பிரச்னை மற்றும் ஒரு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. உண்மையாகவே பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகரித்து விற்பனையாகி வருகிறது.
என்ன பிரச்னை
ஒரு லிட்டர் டீசலின் விலை 80.97 ரூபாய். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 80.90. ஆக ஏழு பைசா கூடுதலாக ஒரு லிட்டர் டீசல் ஒடிஸாவின் புவனேஸ்வரில் அக்டோபர் 21, 2018 முதல் விற்பனை ஆகி வருகிறது. இந்தியாவிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலை, கடந்த சில வாரங்களாக ஒரு ரூபாய் வித்தியாசத்திலேயே விற்பனையாகி வந்த மாநிலமும் ஒடிஸாவாகத் தான் இருக்கும்.
எப்போது இருந்து
கடந்த சனிக்கிழமை அக்டோபர் 20, 2018 அன்று தான் முதல் முறையாக பெட்ரோலை விட டீசல் ஆறு பைசா கூடுதலாக விற்பனை ஆகத் தொடங்கியது. அக்டோபர் 20 2018-ல் ஒடிஸாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 80.82, ஒரு லிட்டர் டீசல் ரூ 80.88-க்கு விற்பனையானது.
அடிப்படை விலை ஏற்றம்
சில மாதங்களுக்கு முன் தான் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் டீசலுக்கான அடிப்படை விலையை லிட்டருக்கு 43.02 ரூபாயில் இருந்து 48.02 ரூபாய்க்கு (ஐந்து ரூபாய்) உயர்த்தினார்கள். பெட்ரோலுக்கான அடிப்படை விலை அதே 43.49-ல்லேயே விற்கப்பட்டது.
ஒரே வாட் வரி
ஒடிஸாவில் (Vlaue Added Tax)என்றழைக்கப்படும் வாட் வரி பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டுக்குமே 26% தான். மற்ற மாநிலங்களில் பெட்ரோலை விட டீசலுக்கு குறைவான வாட் வரியே விதிக்கப்படும். ஆனால் ஒடிஸாவில் சில நிர்வாக வசதிகளுக்காக டீசல் மற்றும் பெட்ரோலுக்கு ஒரே வாட் வரி விகிதத்தையே ஒடிஸா மாநில அரசு பின் பற்றி வருகிறது. இது வரை தன் வாட் வரியைக் குறைத்துக் கொள்வது பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியாக வில்லை.
விலை கணக்கு
மத்திய அரசு விதிக்கும் கலால் வரி பெட்ரோலுக்கு 17.88 ரூபாய். டீசல்க்கு 13.83 ரூபாய். பெட்ரோலுக்கான டீலர் கமிஷன் 3.50 ரூபாய், டீசலுக்கு 2.50 ரூபாய். ஆக மொத்தம் அக்டோபர் 21, 2018-க்கான கணக்குப் படி,
பெட்ரோலுக்கு அடிப்படை விலை 43.49+ கலால் வரி 17.88+ மாநில வாட் வரி 16.03+ டீலர் கமிஷன் 3.50=80.90 ரூபாய்.
டீசலுக்கு அடிப்படை விலை 48.02+ கலால் வரி 13.83 + மாநில வாட் 16.62+ டீலர் கமிஷன் 2.50= ரூ.80.97.
அரசியல்
தற்போது பிஜூ ஜனதா தளம் ஆளும் ஒடிஸாவை மத்திய அரசு இந்த டீசல் விலை ஏற்றத்தை முன்னிட்டு நேரடியாக விமர்சித்து வருகிறது. மத்திய அரசே இந்திய மக்கள் பிரச்னையைப் புரிந்து கொண்டு கலால் வரியைக் குறைத்திருக்கும் போது ஒரு மாநில முதல்வர் ஏன் தங்கள் வாட் வரியைக் குறைத்துக் கொள்ளக் கூடாது என்று ஒடிஸா மாநில பாஜக தலைவர் ப்ரித்விராஜ் ஹரிசந்தன் கேள்வி எழுப்பி இருக்கிறர்.