ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்பட்ட செப்டம்பர் 01, 2016-ல் இருந்து டெலிகாம் துறையை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது. ஜியோ ஆரம்பித்த தேதியில் இருந்து சமீபத்தில் அறிவித்திருக்கும் ஆஃபர்கள் வரை எல்லாமே அம்பானி அதிரடி தான். அந்த அதிரடிப் பட்டியலில் மெகா அதிரடியாக இருக்கும் மகத்தான திட்டம் ஜியோ ஜிகா ஃபைபர். இந்த மெகா திட்டத்துக்கும், சமீபமாக முகேஷ் அம்பானி குழுமம் மேற்கொண்ட பிசினஸ் டீல்களுக்கும் ஒரு நெருங்கிய டீல் இருக்கிறதாம். அதை இன்று வரை எவரும் அதிகம் கவனிக்கவில்லை.
டென் நெட்வொர்க்
நம் ஊர் கேபிள் டீவி போல சேனல்களை வழங்குவது, சன் நெக்ஸ்ட் போல சினிமாக்களை பார்க்க ஒரு அப்ளிகேஷன், ஏசிடி நிறுவனம் போல ப்ராட்பேண்ட் வசதிகளை கொடுப்பது என்று மூன்று முக்கிய பிசினஸ்களை செய்து வருகிறது இந்த நிறுவனம். இந்தியாவில் 430 நகரங்களுக்கு மேல் 1.30 கோடி இணைப்புகளோடு கேபிள் டீவி ஆபரேஷனில் முத்திரை பதித்து இயங்கி வருகிறது. அதனால் தான் ரிலையன்ஸ் கட்டம் கட்டி இந்த நிறுவனத்தின் 66 சதவிகித பங்குகளை 2,290 கோடி ரூபாய்க்கு வாங்க திட்டமிட்டு இருக்கிறது.
ஹதவே கேபிள்ஸ்
டென் நெட்வொர்க் செய்யும் தொழிலில், தனியாக ஒரு சினிமா அப்ளிகேஷன் நடத்தவில்லையே தவிர மற்ற இரண்டிலும் கில்லி. இந்தியாவில் 16 முக்கிய நகரங்களில் ப்ராட்பேண்ட் சேவைகளை வழங்குகிறது. ப்ராட்பேண்டில் மட்டும் 55 லட்சத்துக்கும் மேல் வாடிக்கையாளர்களை ஹதவே கேபிள் வைத்திருக்கிறது. கேபிள் டிவியில் இந்தியாவில் 350-க்கும் மேற்பட்ட நகரங்களில் 72 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கேபிள் டிவி சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். ஆதலால் 51.3% பங்குகளுக்கு 2940 கோடி ரூபாய் செக் எழுதப்பட்டு இருக்கிறது.
பாலாஜி டெலிஃபிலிம்ஸ்
இந்தியாவின் சின்னத் திரை தயாரிப்பாளர்களில் முக்கியமானவர்கள் இந்த பாலாஜி டெலிஃபிலிம்ஸ். 2002 காலத்தில் வட இந்தியாவின் டாப் 25 சீரியல்களில் 22 சீரியல்களை தயாரித்தவர்கள் இவர்கள் தான். அதே 2002-ல் வாக்கில் தமிழகத்திலும் குடும்பம் சீரியலோடு சன் டிவி உடன் கை கோர்த்தது. வட இந்தியாவின் தயரிப்பாளர்களுள் முக்கியமானவரான ஏக்தா கபூரின் நிறுவனம் இது. இதில் அம்பானி தன்னுடைய ஜியோ டிவி, ஜியோ மூவிஸ் போன்றவைகளை மனதில் வைத்துக் கொண்டு இந்த நிறுவனத்தின் 25% பங்குகளை 413 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறார்.
ராடிஸிஸ்
தம்பி நெட் இல்லாம ஒன்னுமே பண்ண முடியலப்பா என்று சொல்வதைத் தான் "Internet of Things" என்று சொல்கிறோம். காலையில் எழுந்து ஏசிய ஆஃப் பண்றதுல இருந்து நைட்டு தூங்குறப்ப திரும்ப ஏசிய ஆன் பண்ணி ஓட விடுறது வரைக்கும் இன்னக்கி எல்லாத்தையும் இணையம் பயன்படுத்தி செஞ்சிக்கிட்டு இருக்கோம். அதுல இந்த ராடிஸிஸ் காரணுங்க நல்ல வேலை பாத்துக்கிட்டு இருந்தாங்க. நம்ம அம்பானி வாங்கிட்டாரு. விலை 510 கோடி ரூபாய்.
எம்பைப்
டெர்மினேட்டர்ல காட்டுற மாதிரி ஒரு காலத்துல மனிஷன் மிஷின் கூட சண்ட போட வேண்டி இருக்கும் என்று சொன்னது நினைவிருக்கலாம். இப்ப என்னடான்னா உடல் உறவுக்கு எல்லாம் கூட ரோபோ கொண்டு வந்துட்டாய்ங்க. இனி நாம ஒரு சுவிட்ச போட்டா போதும் எல்லாம் தானா அப்புடியே நடந்துடும். இந்த அளவுக்கு இன்னும் உலகம் போகல ஆனா இத நோக்கித் தான் இன்னக்கி உலகம் போகுது. அப்படிப்பட்ட ஆர்டிஃபீசியல் இண்டலிஜென்ஸ் துறையில நல்ல வேலை பாத்துக்கிட்டு இருந்த நிறுவனம் தான் இந்த எம்பைப். இனிமே AI - Artificial Intelligence இல்லாம எதையும் சாதிக்க முடியாதுன்னு அறிவியல் உலகம் சொல்லுது. ஆக இதுலயும் நம்ம தலைவர் கண்ணு பட 73% பங்குகளை வாங்கிட்டாரு. என்ன விலைக்குன்னு தெரியலங்க. செக் எழுதுறப்ப சொல்றோம்.
சாவன்
இதப் பத்தி அதிகம் பேச வேண்டாம் பாட்டுக்காக ஒரு அப்ளிகேஷன். சிம்பிளி ஆன்லைன் மியூசிக் ஸ்ட்ரீமிங் கம்பெனி. இது தான் ஜியோ ஜிகா ஃபைபரோட அடி நாதமான முதல் இணைப்பு. விலை ரூபாய் 670 கோடிப்பு.
கைஓஎஸ் (KaiOS)
என்னடா நம்ம அம்பானி எல்லாத்தையும் ரெகுலரா பண்றாரேன்னு பார்த்தோம். இப்ப தான ட்விஸ்ட். நம்ம அம்பானி சார் வெளியிடுற ஜியோ ஃபோன் எல்லாம் இந்த கைஓஎஸ்-ல தான் இயங்கும். நீங்க நினைக்குற மாதிரி இது ஒரு ஓஎஸ் தான். அதாங்க இனிமே ஜியோ ஃபோன்ல ஆண்ட்ராய்டு ஓஎஸ் கிடையாது. இந்த கை ஓஎஸ்-ஐ அதுக்காக திட்டம் போட்டு இழைச்சிக்கிட்டு இருக்காப்புள. எப்புடியாவது ஆண்ட்ராய்ட விட கையை உயர்த்திடணும்ன்னு வேலை பாக்குறாரு.
நாங்க யாருன்னு காட்டுறோம்
தம்பி இப்புடி 100% பளான் பண்ணி நாங்க வேலை பாத்துக்கிட்டு இருக்கோம். ஜியோ ஜிகா ஃபப்பர் மட்டும் வரட்டும், நாங்க திரும்ப இந்தியாவுக்கு யாருன்னு காட்டுறோம் என்று மார் தட்டுகிறார் முகேஷ் அம்பானி.
ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு தொழிலில் இறங்கும் போது அந்தத் துறையே அவர்களுக்கு சொந்தமாகி விடுவது இந்த ஜியோவில் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. முன்பு டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமே கலக்கத்தில் இருந்தன. தற்போது ப்ராட்பேண்டு நிறுவனங்கள், கேபிள் டிவி நிறுவனங்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் என்று பல துறை நிறுவனங்கள், ஜியோ ஜிகா ஃபபரை நினைத்து பீதியில் உள்ளன. டெலிகாம்ல எங்கள அடிச்சிக்க ஆளே கிடையாது என்று சொல்லிக் கொண்டிருந்த ஏர்டெல்லை தற்போது அடித்து விரட்டிக் கொண்டிருக்கிறது ஜியோ. தப்பிப் பிழைக்குமா இந்திய நிறுவனங்கள்...?