இந்தியாவில் தீபாவளி காலங்களில் பட்டாசு விற்பனை அமோகமாக இருக்கும். இப்படிப்பட்ட பட்டாசு விற்பனை சில காலமாகச் சீன இறக்குமதி பட்டாசுகள் போன்றவற்றால் சிக்கி தவித்து வந்தது. தற்போது சீன பட்டாசுகள் விற்பனை மீது விதித்த கடுமையான சட்டங்களால் அவை குறைந்து இருக்கும் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்திக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டது
டெல்லி
டெல்லியில் தொடர்ந்து புகை மாசு அதிகமாகி உலகின் மாசு படிந்த நகரம் பட்டியலில் இடம் பெற்றிருந்த நிலையில் சென்ற ஆண்டுத் தீபாவளிக்கு சில நாட்கள் முன்பு பட்டாசு விற்பனை தடை செய்யப்பட்ட போது பட்டாசு தொழிற்சாலைகள், ஊழியர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பட்டாசு உற்பத்தி
இந்தியாவில் பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்திக்குத் தடை போட்டால் அதை நம்பி உள்ள ஏராளமான தொழ்ற்சாலைகள் மூடப்படும். இதனால் லட்சம் கணக்கான தொழிலாளர்கள் வேலையினை இழக்கும் சூழல் ஏற்படும். தமிழகத்தின் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியை நம்பி ஆயிரம் கணக்கான குடும்பங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்க முடியாது என்றும் மாசு குறைவான பட்டாசுகளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆன்லைன் பட்டாசு விற்பனை
இதற்கிடையில் சென்ற வாரம் சென்னை உயர் நீதிமன்றம் பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்தது மட்டும் இல்லாமல் வழக்கினை நவம்பர் 15-ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது.
முக்கிய நிபந்தனைகள்
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள முக்கிய நிபந்தனைகளை இங்குப் பார்ப்போம்.
1. குறைந்த அளவில் புகை வெளியிடும் பட்டாசுகளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.
2. லைசன்ஸ் உள்ளவர்கள் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.
3. ஆன்லைன் பட்டாசு விற்பனை கூடாது.
4. மேலே கூறிய நிபந்தனைகளை மீறி பட்டாசு விற்பனை செய்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
5. தீபாவளி தினத்தன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.