இந்திய மென்பொருள் சந்தையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் விப்ரோ 2018-19ஆம் நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் லாப அளவீட்டில் சுமார் 14 சதவீத சரிவை சந்தித்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் 2,191.80 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்ற விப்ரோ, பல்வேறு வர்த்தகப் பிரச்சனையின் காரணமாக நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் வெறும் 1,889 கோடி ரூபாய் லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது.
இக்காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை 8.32 சதவீதம் வரையில் உயர்ந்து 14,541 கோடி ரூபாயாக உயர்ந்துள்ள நிலையிலும், லாப அளவீடுகள் அதிகளவில் குறைந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் வருவாய் 4.9 சதவீதம் உயர்ந்து 14,377 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாகத் தலைவர் அபித் அலி நீமூச்வாலா கூறுகையில், இந்தக் காலாண்டில் விப்ரோ வருவாய் மற்றும் லாபம் அளவீடுகளில் சிறப்பான செயல்பாட்டைக் காட்டியுள்ளது. மேலும் இக்காலாண்டில் விப்ரோ மிகப்பெரிய திட்டத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்தது. மேலும் விப்ரோ நிறுவனத்தின் 3 முக்கிய வர்த்தகப் பிரிவு நிலையான வர்த்தக வளர்ச்சியை அடைந்து வருகிறது எனத் தெரிவித்தார்.
விப்ரோ நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் எஸ்பிஐ வங்கியின் முன்னாள் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யா அவர்களைத் தனிப்பட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளது.