ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நட்டத்தில் இயங்கி வருவது மட்டும் இல்லாமல் கடன் மற்றும் ஊழியர்களுக்குச் சரியான நேரத்தில் சம்பளம் அளிக்க முடியாத சூழல் போன்றவற்றில் சிக்கித் தவித்து வருகிறது.
நரேஷ் கோயல் வசம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகள் உள்ள நிலையில் எப்படியாவது அதனை நட்டத்தில் இருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியாவின் மிகப் பெரிய கோடீசுவரரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி மற்றும் டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடாவிடமும் உதவியை நாடி வருகிறார்.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி ஏற்கனவே விமானப் போக்குவரத்துத் துறையில் நுழைய கிங் ஃபிஷர் நிறுவனத்தினை வாங்க முயன்றுளார். இந்நிலையில் நரேஷ் கோயல் கடனில் சிக்கித் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தினை மீட்க முகேஷ் அம்பானியை அணுகியுள்ளார். ஆனால் இது குறித்து இன்னும் அம்பானி எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
டாடா குழுமம்
டாடா குழுமம் ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளதாகவும் அதே நேரம் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஒருவராக இருந்து கட்டுப்படுத்தும் அதிகாரமும் வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றனர்.
ஏர் ஏசியா இந்தியா மற்றும் விஸ்தரா நிறுவனங்களில் கூட்டாளியாக டாடா குழுமம் உள்ளது முக்கியமானது.
கருத்து கூற மறுப்பு
இது குறித்து டாடா குழுமம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் அதிகாரிகளைத் தொடர்புக்கொன்று கேட்ட போது இப்போதைக்கு அது குறித்த கருத்துக்கள் கூற முடியாது என்று மட்டும் மறுத்துள்ளனர்.
எத்தியாட் ஏர்வேஸ்
2017-ம் ஆண்டு முதலே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் எத்தியாட் ஏர்வேஸ்க்கு 24 சதவீத பங்குகளை விற்று விட்டு வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அம்பானி அல்லது டாடா இருவரில் ஒருவர் வாங்க இருக்கும் பங்குகள் எத்தியாட் நிறுவனத்தின் பங்குகளாகத் தான் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
செலவுகள் குறைப்பு
நட்டம் மற்றும் கடன் அதிகரிப்பால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான செலவு குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் கடன் வழங்கியவர்களுக்கு ஜெட் ஏர்வேஸ் அறுதல் கூறிவருகிறது.
வல்லுநர்கள்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த இக்கட்டான நிலைக்குக் காரணம் டாலர் எதிரான ரூபாய் மதிப்புச் சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஒருவேலை ரூபாய் மதிப்பு உயர்ந்து, கச்சா எண்ணெய் விலை குறையும் போது ஜேட் ஏர்வேஸ் மீண்டு எழும். இந்தக் காரணங்களால் இந்தியாவின் பிற விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் நட்டத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.