மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மோடி அரசு 100 வருடம் பழமையான முறையான ரயில்வே பட்ஜெட்டை நீக்கியதற்கு என்ன காரண என்ற ரகசியத்தினை வெளியிட்டுள்ளார்.
ரயில்வே பட்ஜெட்டினை பயன்படுத்திப் பல அரசியல் கட்சிகள் தங்களது மாநிலத்திற்குத் திட்டங்களைப் பெற்றுக்கொண்டு தேர்தலின் போது அதனை வாக்குகள் பெறுவதற்கான கருவியாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மோடியின் விருப்பம்
பிரதமர் நரேந்திர மோடி ரயில்வே பட்ஜெட்டில் அரசியல் தலையீடுகள் இருப்பதை விரும்பவில்லை என்றும் எங்குத் தேவை அதிகம் உள்ளதோ அங்கு ரயிவே திட்டங்களை அதிகப்படுத்தி வளர்ச்சியினை நோக்கிச் செல்ல வேண்டும் என்று பட்ஜெட் முறையினை மாற்றியதாகப் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அரசியல் ஆதாயம்
கடந்த 65 வருடங்களாக ரயில்வே பட்ஜெட் ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், புதிய ரயில் திட்டங்கள் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து அரசியல் கட்சிகள் ஆதாயம் கண்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோடி அரசின் ரயில்வே முதலீடு
மோடி அரசு வந்த பிறகு ரயில்வே துறையில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் பாதுகாப்பு, பயணிகள் சேவை மற்றும் முதலீட்டினை திருப்பி எடுப்பது என்பதை நோக்கி உள்ளதாகவும் பியூஷ் கோயல் கூறினார்.
100% மின்சாரத் திட்டம்
தற்போது ரயில்வே டீசல் இஞ்சின்களைக் குறைப்பது மட்டும் இல்லாமல் 100 சதவீதம் மின்மையமாக்கல், அதற்கு ஏற்றல் அதிகத் திறன் கொண்ட மின்சார நிலையங்களை அமைத்தல் என 10 வருடத்தில் கார்பன் நச்சு வெளியீட்டைப் பூஜ்ஜியமாகக் குறைப்பதையும் இலக்காக வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
ரயில்வே பட்ஜெட் நீக்கம்
கடைசியாக ரயில்வே பட்ஜெட்டினை 2016-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2017-ம் ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படுவதில்லை.