டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 5 நாட்கள் சுற்றுப் பயணமாக ஜப்பான் சென்ற போது புல்லட் ரயில், கடற்படை கூட்டு என 6 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது. அதில் முக்கியமான ஒன்று 75,000 கோடி டாலர் மதிப்பிலான கரன்சி பரிவர்த்தனை ஒப்பந்தமாகும்.
ஜப்பான் இடையிலான இந்தக் கரன்சி பரிவர்த்தனை ஒப்பந்தம் இந்தியாவின் பெருளாதாரத்தின் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
டாலர் மதிப்பு
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் செய்யப்பட்ட சில வட்டி விகித சீர் திருத்தங்களால் பிற நாடுகளின் நாணயங்கள் எதிரான டாலர் மதிப்பு அதிகரித்தது. எனவே இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரம் கேள்விக்குறியான நிலையில் சரிந்து வரும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டனர்.
முதலீடுகளை ஈர்க்கச் செய்யப்பட்ட நடவடிக்கைகள்
நடப்பு கணக்குப் பற்றாக்குறை, ரூபாய் மதிப்புச் சரிவு போன்ற காரணங்களால் இந்திய சந்தை மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை இழந்ததால் அரசுக்கு மிகப் பெரிய தலைவலியாய் மாறியது. இந்நிலையில் இதனைச் சரி செய்ய அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், கடன் பத்திரங்கள் வெளியிடுதல், இறக்குமதியைக் குறைத்தல், ஏற்றுமதியை அதிகரித்தல் போன்ற பணிகளில் அரசு இயங்கி வந்தது.
நம்பிக்கை அதிகரிக்க வாய்ப்பு
ரூபாய் மதிப்பு சரிவால் இந்திய சந்தை மீதான நம்பிக்கையினை இழந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தக் கரன்சி பரிமாற்ற முறை மூலம் நம்பிக்கை வரும் என்றும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தக் கரன்சி பரிவர்த்தனை ஒப்பந்தம் இந்தியாவின் முதலீடுகள் அதிகரிக்க உதவுவது மட்டும் இல்லாமல் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க விரும்பும் இந்திய நிறுவனங்களின் செலவுகளையும் குறைக்கும். ஜப்பான், இந்தியா இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்கான மற்றொரு மைல்கல்லாகவும் இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது.
அரசு
மேலும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பிரமதர்களுக்கு இடையிலான நெருக்கத்தினை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் இதற்கு முன்பு இருந்த கரன்சி பரிமாற்ற ஒப்பந்தத்தில் கூடுதலாக 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் அந்நிய செலாவணிக்கு சிறந்த உறுதிப்பாடு கிடைக்கும் என்றும் நாட்டின் சந்தை மூலதனம் வலுப்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
வெளிநாட்டு முதலீடுகள்
அரசு செய்துள்ள இந்த ஏற்பாடுகளால் வெளிநாட்டு முதலீடுகளை ஈட்டுவதில் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் அமையும். இந்தியாவால் எப்போது வேண்டுமானாலும் வெளிநாட்டு முதலீடு தேவைப்படும் போது எல்லாம் இந்தப் பணத்தினை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளவும் முடியும்.