மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கி இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில் ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
எனவே ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் மற்றும் மத்திய அரசு இடையில் அப்படி என்ன தான் பிரச்சனை என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
வழக்கத்திற்கு மாறான கூட்டம்
செவ்வாய்க்கிழமை மாலை முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் கவுன்சில் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. இந்தக் கூட்டம் நடப்பது வழக்கம் தான் என்றாலும் எப்போது போல் இல்லாமல் ஆர்பிஐ கவர்னர் மட்டும் இல்லாமல் ஆர்பிஐயில் பிற 4 துணை கவர்னர்களும் பங்கேற்றனர். அதிலும் முதன்முறையாக இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்றுள்ளார்.
வைரல் ஆச்சார்யா
ஆர்பிஐ துணை கவர்னர் வைரல் ஆச்சார்யா மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் சுயாட்சியில் தலையிடுவது சரியல்ல என்று பொது மேடையில் குற்றம் சாட்டியதை அடுத்து நடைபெற்ற கூட்டம் என்பதால் முக்கியமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
அருன் ஜேட்லி
நிதி அமைச்சர் அருன் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற இந்த நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் ஆர்பிஐ கவர்னர்கள், செபி தலைவர், பிஎப்ஆர்டிஏ, ஐஆர்டிஏஐ மற்றும் ஐபிசி திவால் போர்டு குழு தலைவர் உள்ளிட்டவர்களும் பங்கேற்றுள்ளனர்.
வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பணப்புழக்கம்
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பணப்புழக்கம் சிக்கலில் இல்லை என்றும் அது மிகைப்படுத்திக் காண்ப்க்கப்பட்டு வருவதாகவும், அது ஏன் என ஆராய்ந்து போதுமான பணப்புழக்கத்தை உறுதி செய்வோம் என்று ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் உறுதி செய்வதாகத் தகவல்கள் கூறுகின்றன.
மத்திய அரசு தலையீடு
சென்ற வாரம் வெள்ளிக்கிழமை ஒரு கூட்டத்தில் பேசிய ஆர்பிஐ துணை கவர்னரான வைரல் ஆச்சார்யா அரசு மத்திய வங்கி விவகாரங்களில் தலையிட்டு வருவது பேரழிவினை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டு இருந்தது பெறும் பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது.
கூடுதல் அதிகாரம்
மேலும் பொதுத் துறை வங்கி நிறுவனங்களைச் சுத்தம் செய்ய ஆர்பிஐக்கு கூடுதல் அதிகாரங்கள் வேண்டும் என்றார். மத்திய வங்கியின் சுதந்திரம் மற்றும் நிதி பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்ய வேண்டியது அவசியமான ஒன்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உர்ஜித் படேல்
மறு பக்கம் இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் மத்திய அரசு ஆர்பிஐ சட்டம் 1934-ன் பிரிவு 7 கீழ் மத்திய வங்கியின் செயல்பாடுகளில் தலையிட முடிவு செய்துள்ளது. எனவே விரைவில் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.