யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி நிறுவனம் பல மாதங்களாகத் திட்டமிட்டு வந்த ஆடை தயாரிப்பு மற்றும் விற்பனை வர்த்தகம் தற்போது முழுமையாகத் துவங்கப்பட்டுச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் பரிதான் Paridhan என்ற பிரான்ட் பெயரில் தனது ஆடை வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் அடுத்த நிதியாண்டுக்குள் ஆடை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிலான வருவாயைப் பெற வேண்டும் என இலக்கை நிர்ணயம் செய்து வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது.
100 விற்பனை கடை
மேலும் மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதிலும் சுமார் 100 விற்பனை கடைகளைத் திறக்கவும் திட்டமிட்டு அதற்கான பணிகளைப் படுவேகமாகச் செய்து வருகிறது. மேலும் 2020ஆம் ஆண்டுக்குள்ள பிரான்சஸ் முறையில் இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட கடைகளைத் திறக்கவும் முடிவு செய்துள்ளது பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி.
3 பிராண்டுகள்
பரிதான் கீழ் 3 பிராண்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளது லிவ்பிட், ஆஸ்தா, சன்ஸ்கார். இதில் ஆஸ்தா பிராண்டு கீழ் பெண்கள் ஆடைகளும், சன்ஸ்கார் பிராண்ட் கீழ் ஆண்கள் ஆடைகளும், லிவ்பிட் கீழ் ஸ்போர்ட்ஸ் வியர் மற்றும் யோகா ஆடைகளும் விற்பனை செய்ய உள்ளது பதஞ்சலி.
ஆன்லைனில் விற்பனை
இதுகுறித்துப் பாபா ராம்தேவ் கூறுகையில், இந்த வர்த்தகத்தில் எங்களின் இலக்கு பன்னாட்டு நிறுவனங்களான அடிதாஸ் மற்றும் பூமா போன்றைவைகள் தான், எங்களது தயாரிப்புகள் சந்தையில் இருக்கும் முன்னணி பிராண்ட் ஆடைகள் விடவும் 30-40 சதவீதம் மலிவானது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த வருடத்திற்குள் ஆடைகளை ஆன்லைனில் விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.