வங்கி நிறுவனங்கள் வாரா கடனில் சிக்கி தவித்து வரும் நிலையில் தற்போது உள்ள சூழலுக்கு இலவச ஏடிஎம் பரிவர்த்தனை, செக், டெபாசிட், லாக்கர் சேவைகளுக்குக் கட்டணம் விதிக்கத் தொடங்கலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலவச சேவைகளுக்கு வங்கிகள் 40,000 ரூபாய் கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற வருவாய் துறையின் முடிவு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை எழுந்து வருவதே இதற்கான காரணம் என்றும் கூறப்படுகிறது.
பிரதமர் அலுவலகம்
வங்கி நிர்வாகங்கள் நிதி அமைச்சகத்துடன் விவாதித்து இது குறித்துச் சுமுக முடிவு எடுக்காத நிலையில் வருவாய் துறை இது குறித்துப் பிரதமர் அலுவலகத்தினை நாடியுள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
வருவாய் துறை
சென்ற ஏப்ரல் மாதம் வங்கிகள் தாங்கள் வழங்கும் இலவச சேவைகளுக்குச் சேவை வரியினைச் செலுத்த வேண்டும் என்று வருவாய் துறை நோட்டிஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. 2018-ம் ஆண்டு வரை 12 சதவீத சேவை வரியும், செலுத்த தவறினால்100 சதவீத அபராதம் போன்று எல்லாம் வருவாய் துறை வங்கிகளை மிரட்டி வருகிறது.
இலவசங்களுக்குக் கட்டணம்
வருவாய் துறை தொடர்ந்து 40,000 கோடி ரூபாய் கேட்டு அழுத்தம் அளித்து வந்தால் சாமானிய மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச வங்கி சேவைகளுக்குக் கட்டணம் வசூலிப்பதை தவிர வேறு வழியாயில்லை என்றும் அதில் பிரதமர் மோடியின் ஜன் தன் யோஜனா கணக்குகளும் அடங்கும் என்றும் கூறுகின்றன.
எதிர்பார்ப்பு
மத்திய அரசு வங்கிகளுக்கு அனுப்பிய சேவை வரி வசூலிப்பு குறித்த நோட்டிசை திரும்பப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போதைய முடிவு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
எரிவாயு
இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கிவிட்டு, மண்ணெண்ணெய் வழங்குவதையும் நிறுத்தியது மட்டும் இல்லாமல் எரிவாயு சிலண்டர்களுக்கு அளித்து வந்த மானியத்தினைக் குறைத்து வருவது போன்ற ஒரு நடவடிக்கையா இது என்று சந்தேகம் எழுந்துள்ளது.
2014-ம் ஆண்டுக்கு முன்பு மானிய விலை சிலிண்டர்கள் விலை 400 ரூபாய்க்குக் குறைவாக இருந்து வந்த நிலையில் தற்போது 700 ரூபாயினை எட்டியுள்ளது. மானியம் இல்லா சிலிண்டர்கள் விலை இரட்டிப்பாகியுள்ளது.
சமுக ஆர்வலர்கள்
மக்களை மானியங்கள் அளித்துப் பயன்படுத்த வைத்துவிட்டு அவர்கள் பொருளாதாரம் உயராத நிலையில் இது போன்ற மானியங்களை நீக்குவது மட்டும் இல்லாமல் வங்கிகள் அளித்து வரும் இலவச சேவைகளுக்குக் கட்டணம் விதிக்க வேண்டும் என்ற சூழலுக்குத் தள்ளப்படுவதும் எந்த விதத்தில் நியாயம். இதனால் வாரா கடனில் சிக்கி தவித்து வரும் மக்கள் மட்டும் இல்லாமல் சாமானிய மக்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.