2019-ம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வர உள்ள நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தாங்கள் கடந்த 4 ஆண்டுகளில் அறிமுகம் செய்துள்ள திட்டங்கள் குறித்துச் சர்வேயினை எடுக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மக்கள் வரும் தேர்தலில் பாஜக-க்கு எப்படி வாக்களிப்பார்கள் என்று கணிக்க முடியும் என்று எதிர்பார்க்கின்றனர்.
மாவட்ட வாரியான ஆய்வு
எனவே விரைவில் மத்திய அரசு நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 1,000 நபர்களிடம் இருந்து தங்களது திட்டங்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆய்வு நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் சர்வே
மத்திய அரசு முதல் திட்ட சர்வேயாகப் பெண்களுக்கு இலவசமாக அளித்த சமையல் எரிவாயு இணைப்புக் குறித்ததாக இருக்கும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
யார் இந்தச் சர்வேயை எடுப்பார்கள்?
சர்வே எடுக்க முடிவு செய்தாலும் யார் இந்தச் சர்வேயை எடுப்பது என்பதில் குழப்பம் நீட்டித்து வருகிறது. பிரதான் மந்திரி உஜாலா யோஜனா திட்டத்திற்கு எண்ணெய் நிறுவனங்கள் சர்வே செய்யும் என்று அரசு வட்டார தகவல்கள் கூறுகின்றன.
தேர்தல் அறிவிப்பு
தேர்தல் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாக வாய்ப்புள்ளதால் அதன் பிறகு அரசால் புதியதாக எந்தத் திட்டங்களையும் அறிமுகம் செய்ய முடியாது. எனவே இந்தச் சர்வேக்கள் விரைவாக எடுக்கப்பட்டுப் பட்ஜெட்டில் அதற்கேற்றவாறு அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி
தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 4 ஆண்டுகளில் அடல் பென்ஷன் யோஜனா, ஜன் தன் வங்கி கணக்கு போன்ற பல திட்டங்களை அறிமுகம் செய்தது மட்டும் இல்லாமல் ஏற்கனவே இருந்து வந்த போஸ்டல் இன்சூரன்ஸ் உள்ளிட்ட திட்டங்களையும் மறு அறிமுகம் செய்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.