பஞ்சாப் நேஷனல் வங்கியில் பலகோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியின் தலைமறைவுத் திட்டம் பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும் முன்பே தெரியும் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 8 மாதங்களுக்கு முன்பே வருமான வரித்துறை இது தொடர்பான தகவலை மத்திய அரசிடம் தெரிவித்ததாக கூறியுள்ளது வருமான வரித் துறை.
வங்கி மோசடி
23 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி மூலம் இந்திய வங்கித் துறையையே நிலை குலைய வைத்தவர் நிரவ் மோடி. வைர வியாபாரியான இவர் தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் இணைந்து நடத்திய கையாடல் பஞ்சாப் நேஷனல் வங்கியை வெகுவாக பாதித்தது.
தப்ப உதவினாரா மோடி
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜூவாலா, வங்கி மோசடி விவகாரத்தை எழுப்பி பா.ஜ.கவை கடுமையாக சாடினார். மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியும், மெகுல் சோக்சியும் இந்தியாவை விட்டு தப்பிச் செல்ல இருப்பதாக 8 மாதங்களுக்கு முன்பே வருமானவரித்துறை அதிகாரிகள் மத்திய அரசிடம் தெரிவித்து விட்டனர். அவர்கள் இருவரும் எப்படி தலைமறைவு ஆனார்கள் என்பது குறித்து பிரதமர் மோடிக்கும், அருண்ஜேட்லிக்கும் நன்கு தெரியும் என சுர்ஜூவாலா குற்றம் சாட்டினார்.
இவரது பங்கு என்ன
நேரடி வரிகள் வாரியத்தின் (Central Board Of Direct Taxes) அப்போதைய தலைவராக இருந்த சுஷில் சந்திராவுக்கு, நிரவ் மோடியும், மெகுல் சோக்சியும் தப்பிச் செல்வது குறித்து தெரியாதா...? எட்டு மாதங்களுக்கு முன் அவர்களைப் பற்றி அரசுக்கு தகவல் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டீர்களா..?, இதில் உங்கள் பங்கு என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங்
விசாரணையில் தாமதம்
ஆண்டின் தொடக்கத்தில் தெரிய வந்த நிரவ் மோடியின் வங்கி மோசடி குறித்து, காலதாமதமாக இண்டர்போலை அணுகி, லண்டனில் இருந்து நாடு கடத்த கேட்டுக் கொண்டது ஏன் என்று வினவியுள்ளார். சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்த 6,400 கோடி ரூபாயை, வெளிநாடுகளில் உள்ள டம்மி நிறுவனங்களில் அவரும் அவரது குடும்பத்தினரும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழியர்களுக்கும் தொடர்பு
நிரவ் மோடி, மெகுல் சோக்சி மட்டுமல்ல பஞ்சாப் நேஷனல் பேங்கில் உள்ள பல ஊழியர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மவுனமாக இருக்கும் மோடி மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வரை இந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.