உலகில் பொருளைத் தயாரிப்பவன் தான் விலையை நிர்ணயிக்கிறான். ஆனால் விவசாயத்துக்கு மட்டும் குறிப்பாக இந்திய விவசாயத்துக்கு மட்டும் விதி விலக்கு. பொருளை ஏழை விவசாயி கோமனம் கட்டிக் கொண்டு தயாரிப்பான், ஏசி அறையில், குட்டே பிஸ்கெட் சாப்பிட்டுக் கொண்டே அந்த விவசாயப் பொருளின் விலையை அரசு நிர்ணயிக்கும். அல்லது வெள்ளையும் சொல்லையுமாக இன்னோவா காரில் திரியும் தரகன் நிர்ணயிப்பான். இது தான் இந்திய விவசாயிகளின் தலையெழுத்து.
பிரதமருக்கு ரூ.1064
அண்மையில் பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு 1064 ரூபாய் கொடுத்த வெங்காய விவசாயி சஞ்ஜெய் சாத்தேவை நாம் மறந்துவிட்டோம். கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். மொத்த கொள்முதல் சந்தையில் தன் மொத்த 750 கிலோ வெங்காயத்தை கடுமையாக பேரம் பேசி கிலோவுக்கு 1.41 ரூபாய்க்கு விற்றார். கிடைத்த தொகையான 1064 ரூபாயை அப்படியே பிரதமருக்கு மணி ஆர்டர் செய்தார். மணி ஆர்டருக்கு கூடுதலாக 54 ரூபாய் வேறு செலுத்தினார்.
அடுத்த கதறல்
சஞ்ஜெய் சாத்தேவைத் தொடர்ந்து இப்போது ஸ்ரேயாஸ் அபேல் என்கிற விவசாயி தன் 2657 கிலோ வெங்காயத்தை கிலோவுக்கு ஒரு ரூபாய் ஒன்பது பைசாவுக்கு விற்றிருக்கிறார். கிடைத்த தொகை 2,916 ரூபாய். போக்குவரத்து, ஏத்து இறக்கு கூலிகள் போல வீட்டுக்கு கொண்டு வர முடிந்த தொகை எவ்வளவு தெரியுமா..? வெறும் 6 ரூபாய்.
மகாராஷ்டிர முதல்வருக்கு
அந்த ஆறு ரூபாயை மகாராஷ்டிர முதல்வருக்கு அனுப்பி இருக்கிறார் அபேல். டிசம்பர் 07, 2018 அன்று முதல்வருக்கு தன் ஆறு ரூபாயை மணி ஆர்டர் செய்திருக்கிறார்.
கதறல்
நான் இந்த வெங்காய உற்பத்தி சுமார் 2 லட்சம் ரூபாய் வரை செலவழித்திருக்கிறேன். ஆனால் எனக்கு கிடைத்த தொகையோ 6 ரூபாய். நான் எப்படி என் கடன்களை திருப்பிச் செலுத்தப் போகிறேன் எனத் தெரியவில்லை என்று கதறுகிறார்.
இலவசம்
மகாராஷ்டிர மாநிலத்தில் நெவாசா என்கிற பகுதியில் ஒரு விவசாயி தன்னுடைய 2000 கிலோ வெங்காயத்தை இலவசமாக கொடுத்துவிட்டு போனார். இலவசமாக வெங்காய்த்தை மக்களுக்கு கொடுக்கும் போது "வெங்காய விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என ஒரு பதாகையையும் வைத்திருந்தாராம்.
இதே நிலை தான்
கடந்த நான்கு வருடத்தில் எங்களுக்கு எப்போதாவது தான் ஒழுங்கான விலை கிடைத்திருக்கிறது. இப்படி நான்கு ஆண்டுக்கு ஒரு முறை இரண்டு முறை மட்டுமே ஒழ்ங்கான விலை கிடைத்தால் நாங்கள் எப்படி பிழைப்பது, கடனை திருப்பி செலுத்துவது, எங்கள் பிள்ளைகள் படிப்பது என கதறி அழுதிருக்கிறார் வக்சோவர் என்கிற விவசாயி.
நாங்க பிச்சைக்காரர்கள்
மத்திய மற்றும் மாநில அரசுகளோடு விவசாயக் கொள்கைகளால் நாங்கள் பிச்சைக்காரர்களாகவே வாழ்கிறோம். நாங்கள் வாங்கிய கடனை நாங்களே கெளரவமாக திரும்ப செலுத்தி தலை நிமிர்ந்து வாழ முடியவில்லை. எப்போது அரசு எங்கள் கடனைத் தள்ளுபடி செய்யும் என பிச்சைக்காரர்கள் போல காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதை விட எங்களைக் கேவலப்படுத்த அரசால் முடியுமா...?
கடைசி சரணாகதி
இந்த விலைப் பிரச்னைக்கும், கடன் தொல்லைக்கும் தாக்கு பிடிக்க முடியாத இரண்டு அப்பாவில் மகாராஷ்டிர விவசாயிகள் விவசாயிகளின் கடைசி ஆயுதத்தை கையில் எடுத்துவிட்டார்கள். தற்கொலை.
தற்கொலை
ஆம். எங்களை இந்த நாடும், அரசும் காப்பாற்றவில்லை என தங்கள் உயிரைக் கொடுத்து உரக்கச் சொல்லி இருக்கிறார்கள். இது தான் நம் எங்கள் (இந்திய விவசாயிகளின்) நிலையா...? வேறு எப்படிச் சொன்னால் அரசுக்கும் புரியும்..? என்ன செய்தால் எங்கள் வலியை உணர்வீர்கள், என கோபம் கொப்பளிக்கப் பேசுகிறார் வக்சோவர்.
அரசே...?
எல்லோருக்கும் வாயும் வயிறும் இருக்கிறது, விவசாயிகளிடம் நிறைய கேள்வி இருக்கிறது, மக்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது... அரசே உங்களிடம் என்ன இருக்கிறது...? விவசாயிகளின் தற்கொலைக் கணக்குகளா...?