இந்தியா டெலிகம்யூனிகேஷன் என்றழைக்கப்படும் டெலிகாம் துறையின் மிகப் பெரிய சந்தை. இப்போது நிதி நெருக்கடியில் உள்ளதாம்.
ஏன்...?
டெலிகாம் நிறுவனங்களின் சிம்ம சொப்பனமாக திகழும் ஜியோவின் வருகைக்குப் பிறகு எந்த ஒரு டெலிகாம் நிறுவனமும் சரியாக காச் பார்க்க முடியவில்லை. காரணம் ஜியோவின் அதிரடி ஆஃபர். டேட்டாக்களை அள்ளிவிடுவது என கலக்கி எடுத்திருக்கிறார்கள்.
ஏலம் வேண்டாம்
இந்த கஷ்டமான சூழலில், அலைக்கற்றைகளை மீண்டும் ஏலத்தில் விட வேண்டாம். அப்படி விட்டாலும் ஏலத்தில் பங்கெடுத்து அலைகற்றைகளை வாங்கும் அளவுக்கு கையில் காசு இல்லை என நேரடியாக விஷயத்தைப் போட்டு உடைத்திருக்கிறது.
எப்போது வைக்கலாம்
இப்போது தான் நிலைமை கொஞ்சம் பிடிபட ஆரம்பித்திருக்கிறது எனவே, வரும் 2020 வரை அலைக் கற்றை ஏலம் நடத்த வேண்டாம். அதன் பின் நடத்தலாம் என வொடாஃபோன் ஐடியா நிறுவனம் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது.
ஜியோ பேய் வருகை
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அறிமுகத்துக்குப் பின் இந்திய தொலைத்தொடர்பு துறையில் அதிகப்படியான போட்டி உருவானது. இனி இந்திய டெலிகாம் சந்தையின் நிற்க வேண்டும் என்றால் ஜியோவைத் தொடர்ந்து சேவைக் கட்டணங்களைக் குறைக்க வேண்டிய கட்டாய நிலைக்குப் போட்டி நிறுவனங்கள் தள்ளப்பட்டன.
இப்போது வரை
இதனால், வோடாஃபோன் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட இந்தியாவின் பெரிய டெலிகாம் நிறுவனங்களே நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலை யில், அலைக்கற்றை ஏலம் விடக் கூடாது என்று வோடபோன் ஐடியா நிறுவனம் தொலைத் தொடர்பு துறைக்கு கடிதம் அனுப்பி யுள்ளது. இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது.
முதலில் 4 ஜி.
ஐந்தாம் தலைமுறை அலைக் கற்றை அறிமுகப்படுத்தப்பட்டால் தான் அலைக்கற்றைக்கான தேவை அதிகரிக்கும். மேலும், ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முன், இந்தியா முழுமைக்கும் முதலில் 4ஜி தொழில்நுட்பம் சென்றடைய வேண்டியது அவசியம். அப்போது தான் வளர்ச்சி சீராக இருக்கும் என உருகித் தள்ளி இருக்கிறது வோடாஃபோன் ஐடியா.
அதன் பின்
ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை அறிமுகப்படுத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள், தேவையான ஹார்ட்வேர் போன்றவைகள் தயாரான பின் அலைக்கற்றை ஏலம் நடத்தலாம். ஐந்தாம் தலைமுறை அலைக் கற்றைத் தொழில் நுட்பத்துக்குத் தேவையான கட்ட மைப்புகளை உருவாக்க 2020 வரை கால நீட்டிப்பு கேட்பது ஒன்றும் பெரிய தூரம் அல்ல. எனவே அதுவரை அலைக்கற்றை ஏலம் விட வேண்டாம் என அழுத்தமாக வேண்டுகோள் வைத்திருக்கிறது.
பொருளாதாரம் பாதிக்கப்படும்
மேலும், தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் அலைக் கற்றை ஏலம் நடத்தி சரியான தொகை ஏலத்துக்கு கிடைக்காவிட்டால் அரசுக்கும் நஷ்டம், மக்களுக்கும் போதுமான தொலைத் தொடர்பு வசதிகள் கிடைக்காமல் போகலாம். எனச் சொல்லி இருக்கிறது வொடாஃபோன் ஐடியா.