டெல்லி: நேற்று, இந்த 2019 - 20 நிதி ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு (டிசம்பர் 2019) ஜிடிபி விவரங்கள் வெளியாயின.
2019 - 20 நிதி ஆண்டின் முதல் காலாண்டான ஜூனில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி சுமாராக 5.0 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்து இருந்தார்கள். ஆனால் நேற்று வெளியான புதிய ஜிடிபி கணிப்புகளில், இந்த ஜூன் காலாண்டின் ஜிடிபி 5.6 சதவிகிதமாக வளரும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
அடுத்த செப்டம்பர் 2019 காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 4.5 சதவிகிதமாக இருக்கலாம் என வந்த கணிப்புகள் அனைவரையும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கியது. ஆனால் நேற்று, இந்த கணிப்பையும் திருத்தி, செப்டம்பர் காலாண்டின் இந்திய பொருளாதாரம் 5.1 சதவிகிதம் வரை வளரும் எனச் சொல்லி இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று வெளியான 2019 - 20 நிதி ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டில் தான், இந்தியாவின் ஜிடிபி 4.7 சதவிகிதமாக கொஞ்சம் வளரலாம் எனக் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த 4.7 சதவிகிதம் என்பது, கடந்த 7 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவிலான ஜிடிபி வளர்ச்சி எனச் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. கடந்த 2012 - 13 நிதி ஆண்டில் மார்ச் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 4.3 சதவிகிதமாக வளர்ச்சி கண்டது. அதற்குப் பின் மிகக் குறைந்த காலாண்டு ஜிடிபி வளர்ச்சி என்றால், அது இந்த டிசம்பர் 2019 தான் எனவும் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
பொருளாதார வல்லுநர்களோ, இந்த கொடூரமான கொரோனா வைரஸால் இன்னும் கூட பொருளாதாரம் சரிய வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி நம்மை பயமுறுத்துகிறார்கள்.
அதோடு 2019 - 20 முழு நிதி ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி அதே 5.0 சதவிகிதமாக இருக்கலாம் என தேசிய புள்ளியியல் துறை சொல்லி இருக்கிறார்கள்.
ஆக கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து இதுவரை உலக பொருளாதாரம் வெளியே வரவில்லை என்பதைச் சொல்லிவிட்டார்கள். அடுத்தடுத்த காலாண்டுகளில், என்ன ஆகும் என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.