டெல்லி: அண்ணாச்சி கடைக்கு போய் பொருட்களை வாங்குவதை விட ஆன்லைனின் வாங்குவதையே இன்றைய தலைமுறையினர் விரும்புகின்றனர். அந்த துறையில் புதிய வேலை வாய்ப்புகளும் பெருகி வருகின்றன. ஆன்லைன் வர்ததக நிறுவனமான அமேசான் நடப்பு ஆண்டில் சுமார் 1300 புதிய வேலை வாய்ப்புகளை வழங்கப்போகிறது. இந்தியாவில் வேலை தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய வாய்ப்பு மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம், தகவல் தொழில்நுட்பத் துறை தொடங்கி அரிசி, உப்பு, புளி, மிளகாய் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்து விதமான பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.
இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் நிர்வாகப் பிரிவு முதல் சேவைப் பிரிவை வரையிலும் 60000 நபர்களை பணியில் அமர்த்தியது. இது ஒட்டுமொத்தமாக அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையில் 10 சதவிகிதமாகும்.
அமேசானில் 1286 புதிய வேலை
அமேசான் இந்தியா நிறுவனம் நடப்பு 2019ஆம் ஆண்டிலும் தகவல் தொழில் நுட்பத் துறைக்கு புதிதாக ஆட்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. ஈ-காமர்ஸ் என்னும் ஆன்லைன் பிரிவின் கீழ் உள்ள கணணி வர்த்தகம், பணப் பட்டுவாடா, வாடிக்கையாளர் சேவைப் பிரிவு, கண்டென்ட் (Prime Video), வாய்ஸ் அசிஸ்டெண்ட், நுகர்பொருட்கள் விற்பனைப் பிரிவு, போன்ற துறைகளை விரிவாக்கம் செய்ய பணியாளர்கள் தேவைப்படுவதால் இப்பிரிவிற்கு மட்டும் சுமார் 1286 நபர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னை, பெங்களூரு மட்டும் ஹைதராபாத் நகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தகவல் தொழில் நுட்பப்பிரிவில் வேலை பார்ப்பவர்களுக்கும், புதிதாக வேலை தேடுபவர்களுக்கும் இது ஒரு இனிப்பான செய்தியாகும்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் எண்ணிக்கையே அதிகமாம். அதே சமயத்தில் சீனாவில் 467 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னோடியான ஜப்பானில் 381 பேரும், சிங்கப்பூரில் 174 பேரும் ஆஸ்திரேலியாவில் 250 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்னென்ன வேலைகள்
அமேசான் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நுகர்வோரின் விருப்பத்தை சரியான நேரத்தில் பூர்த்தி செய்வதால்தான் எங்கள் நிறுவனம் சீரான வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. இந்த வளர்ச்சியை அதிகரிக்கவும் நுகர்வோரின் விருப்பம் அறிந்து சேவை செய்யவும் நாடு முழுவதும் கூடுதல் திறமைசாலிகள் தேவைப்படுவதால், அவர்களை கண்டறிந்து பணியில் அமர்த்துவது எங்களுக்கு சவாலான விசயமாகும்.
தகவல் தொழில் நுட்பம் மற்றும் விரிவாக்கம், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல், தரத்தை உறுதிப்படுத்துதல், உற்பத்தி மேலாண்மை, இணையதள உருவாக்கம் (Web designing), விநியோக மேலாண்மை, கண்டெண்ட் விரிவாக்கம், ஃபோட்டோகிராபி மற்றும் ஸ்டுடியோ போன்ற பிரிவிற்கு கூடுதல் திறமைசாலிகள் தேவைப்படுவதால் அவர்களை கண்டறிந்து தேர்ந்தெடுத்து நாடு முழுவதும் பணியில் அமர்த்துகிறோம்.
புதிய திறமைசாலிகள்
கடந்த பத்து ஆண்டுகளில் இதுபோல ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் திறமைசாலிகளை தேர்ந்தெடுத்து அவர்களின் திறமையை மேம்படுத்தி ஊக்குவித்து நாடு முழுவதும் பணியில் அமர்த்தி உள்ளோம், என்றார். மேலும் அவர் கூறுகையில், இந்தியா கூடுதல் திறமைசாலிகள் நிறைந்த நாடாகும். எனவே அவர்களை கண்டறிந்து ஊக்குவித்து தொழில் திறனை அதிகரித்து, இந்தியாவிலும் உலகம் முழுவதும் வர்த்தகத்தை அதிகரிப்பதே அமேசான் நிறுவனத்தின் நோக்கமாகும் என்றார்.
தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் கூறுகையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட நேரடி அந்நிய முதலீட்டு கொள்கையானது (Foreign Direct Investment-FDI) அமேசான் நிறுவனத்திற்கு கூடுதல் சாதகமாக அமைந்துள்ளது. இதன் காரணமாகவே தற்போது அமேசான் நிறுவனம் புதிதாக 1286 நபர்களை தேர்ந்தெடுக்க முடிவெடுத்துள்ளது என்றனர்.