டெல்லி: பிரதமர் மோடியின் நான்கரை வருட ஆட்சி காலத்தில் இந்தியாவின் கடன் சுமை கிட்டத்தட்ட 50 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 2014ல் ரூ.54,90,763 கோடியாக இருந்த மத்திய அரசின் கடன் தற்போது ரூ.82,03,253 கோடியாக உயர்ந்துள்ளதாக
கூறப்பட்டுள்ளது. மோடி சர்க்கார் கடன் சர்க்கார் ஆகி மக்களின் தலையில் கடனை சுமத்தியுள்ளது.
இந்தியாவின் பிரதமராக கடந்த 2014ம் ஆண்டு நரேந்திர மோடி பதவியேற்றார். இவர் பதவியேற்ற சில மாதங்களில் பொருளாதார சீர்திருத்தம், கருப்பு பண ஒழிப்பு உள்ளிட்ட காரணங்களை கூறி பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி போன்ற திட்டங்களை செயல்படுத்தினார். பாஜக ஆட்சி பொறுப்பேற்றால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால் கடன் அதிகரித்ததுதான் மிச்சம் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
2010-2011 நிதி ஆண்டு முதல் அரசுக்கு உள்ள கடன் பற்றிய விரிவான பகுப்பாய்வு அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் இந்தியாவின் கடன் மதிப்பு 54,90,763 கோடி ரூபாயாக இருந்தது என நிதி அமைச்சகத்திடம் உள்ள தரவுகள் கூறுகின்றன. அதுவே 2018 செப்டம்பர் மாதம் வரையில் மத்திய அரசுக்கு உள்ள கடன் 82,03,253 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. விஜய் மல்லையா போன்ற ஏமாற்றுப்பேர்வழிகளுக்கு கடன்களை வாரி வழங்கியதால்தான் இந்த சிக்கல் என்கின்றது அந்த ஆய்வு.
தப்பி ஓடிய கடனாளிகள்
மோடியின் ஆட்சியில் நாட்டில் தொழில்களுக்கான கடன் பெறுவது எளிதாக்கப்பட்டதன் காரணமாக உள்நாட்டுக் கடன்கள் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ரூ.48 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் மொத்தக் கடன் மேற்கூறிய நடவடிக்கைகள் மூலமாக ரூ.73 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டிலுள்ள பெரும் பணக்காரர்கள் சிலர் அதிகக் கடன் பெற்றுக்கொண்டு திரும்ப கொடுக்காமல் நாட்டை விட்டு வெளியேறினர். இந்த நடவடிக்கைகள் நாட்டின் கடன்சுமை அதிகரிப்பிற்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளது.
கடன் சுமை
மோடி அரசின் 4.5 வருட ஆட்சியில் கடன் பெறுவது மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 48 லட்சம் கோடியாக இருந்த மொத்த கடன் மதிப்பு 73 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பொதுக் கடனில் 51.7 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது. உள்நாட்டுக் கடன் 54 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மேலும் சந்தை கடன் 47.5 சதவிகிதம் உயர்ந்து 52 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டு இறுதியில் தங்கப் பத்திரங்கள் மீது எந்த ஒரு கடனும் இல்லாமல் இருந்தது. தங்கத்தை நாணயமாக்கல் திட்டத்தின் கடன் 9,089 கோடி ரூபாயாக இருந்தது.
நிதிப்பற்றாக்குறை
2010-2011 நிதி ஆண்டு முதல் அரசுக்கு உள்ள கடன் பற்றிய விரிவான பகுப்பாய்வு அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அப்படி இந்த முறை 8வது பதிப்பு வெளியானதில் இந்தக் கடன் விவரங்கள் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கடன் எல்லாம் நடுத்தரக் காலச் சரிவு போக்கு மற்றும் நிதி பற்றாக்குறை என்பது ரிஸ்க் வாய்ந்தவையாகவும் உள்ளது. இந்த கடன் அதிகரிப்பால் தற்போது நாட்டில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த அறிக்கை முடிவுகள் செப்டம்பர் 2018 காலகட்டத்திற்குள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
பணமதிப்பு நீக்கம்
மோடி பதவியேற்ற பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு கறுப்புப் பணத்தினை ஒழிப்பதாகவும், மீட்பதாகவும் கூறி இந்தியாவில் கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கறுப்புப் பணத்தை ஒழிக்கவுமில்லை, மீட்கவுமில்லை. மாறாக கறுப்புப் பணத்தை அதிகரிக்கவே செய்தது. மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடுத்தர குடும்ப வர்க்கத்தினரின் பொருளாதாரத்திற்கு பேரிடியாய் அமைந்தது. இந்த நடவடிக்கை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முற்றிலும் சாதகமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் போடுவோம் என்று முழங்கினர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் கடன் சுமைதான் அதிகரித்துள்ளது. மோடி சர்க்கார் கடன் சர்க்கார் ஆனதுதான் மிச்சம்.