டெல்லி: ஏழை முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு மாதம் ரூ.200 வழங்கப்பட்டு வருகிறது, இதை ரூ.800 ஆக உயர்த்தப்பட உள்ளது. 80 வயதுக்குட்பட்ட முதியோருக்கு மாத ஓய்வூதியம் ரூ.500 வழங்கப்பட்டுவரும் நிலையில் இது ரூ.1200 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு முன்பாக கிராமப்புற மக்களையும், விவசாயிகளையும் கவர்வதற்காக ஏராளமான திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பு உள்ளது. கடன் வட்டி தள்ளுபடி, வருவாய் தரும் திட்டம், கடன் அளிப்பு உள்ளிட்ட திட்டங்கள் வரும் காலங்களில் அறிவிக்கப்படலாம்.
ஆண்டுக்கு 50 லட்சத்துக்குக் குறைவாக விற்று முதல் செய்துவரும் சிறிய கடை உரிமையாளர்கள், வர்த்தகர்களுக்கு எளிய முறையில் கடன்வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிய கடை வைத்திருப்போர், வர்த்தகர்கள் ஆகியோர் தங்களுக்குத் தேவையான விபத்து காப்பீடு திட்டத்தை தேர்வு செய்யும் போது அவர்களுக்குத் தள்ளுபடி அளிக்கும் திட்டத்தையும் பரிசீலித்து வருகிறது.
இடைக்கால பட்ஜெட்
நாட்டில் உள்ள ஏழை முதியோர்கள்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் மாத உதவித் தொகையை உயர்த்த மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிக்கையை மத்திய நிதி அமைச்சகத்திடம் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் இடைக்கால பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாத ஓய்வூதியம்
லோக்சபா தேர்தலில் முதியோர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் வாக்குகளைக் கவர்வதற்காக இதுபோன்ற சலுகைகளை அறிவிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, தற்போது ஏழை முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு மாதம் ரூ.200 வழங்கப்பட்டு வருகிறது, இதை ரூ.800 ஆக உயர்த்தப்பட உள்ளது. 80 வயதுக்குட்பட்ட முதியோருக்கு மாத ஓய்வூதியம் ரூ.500 வழங்கப்பட்டுவரும் நிலையில் இது ரூ.1200 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டால், அதன்பின் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கோரப்படும்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்
மத்திய அரசின் உதவித்தொகையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய சமூக உதவித்தொகை திட்டத்துக்கு நடப்பு ஆண்டில் ரூ.9,975 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் 3 கோடி மக்கள் பயன் பெறுகிறார்கள். இதில் 80 லட்சம் விதவைகள், 10 லட்சம் மாற்றுத்திறனாளிகள், 2.20 கோடி ஏழை முதியோர்கள் அடக்கம்.
ரூ.30 ஆயிரம் கோடி செலவு
இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் போது அரசுக்குக் கூடுதலாக ரூ.30 ஆயிரம் கோடி செலவாகும் என ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர். மத்திய அரசு உதவித்தொகை, மாநில அரசுகளின் உதவித்தொகை ஆகியவற்றை இணைத்து வழங்க ஆலோசிக்கப்பட்டு வந்தது. அது தொடர்பாக கள ஆய்வுகளும் நடத்தப்பட்டன. சமீபத்தில் 5 மாநிலத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தை வேகப்படுத்தி, கிராமப்புற மக்களைக் கவர உதவித்தொகை உயர்த்தப்பட உள்ளது.
கடன் தள்ளுபடி
லோக்சபா தேர்தலுக்கு முன்பாக கிராமப்புற மக்களையும், விவசாயிகளையும் கவர்வதற்காக ஏராளமான திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. குறிப்பாக வட்டி தள்ளுபடி, வருவாய் தரும் திட்டம், கடன் அளிப்பு உள்ளிட்ட திட்டங்கள் வரும் காலங்களில் அறிவிக்கப்படலாம்.
சிறிய கடை உரிமையாளர்களுக்கு கடன்
ஆண்டுக்கு 50 லட்சத்துக்குக் குறைவாக விற்று முதல் செய்துவரும் சிறிய கடை உரிமையாளர்கள், வர்த்தகர்களுக்கு எளிய முறையில் கடன்வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை விற்று முதல் வைத்துள்ள வர்த்தகர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான இலவச விபத்துக்காப்பீடு வசதி அளிக்கவும் அரசு பரிசீலித்து வருகிறது.
விபத்துக்காப்பீடு திட்டம்
சிறிய கடை வைத்திருப்போர், வர்த்தகர்கள் ஆகியோர் தங்களுக்குத் தேவையான விபத்து காப்பீடு திட்டத்தை தேர்வு செய்யும் போது அவர்களுக்குத் தள்ளுபடி அளிக்கும் திட்டத்தையும் பரிசீலித்து வருகிறது. இந்த அறிவிப்புகள் வரும் இடைக்கால பட்ஜெட்டில் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசில் பதிவு செய்துள்ள வர்த்தகர்கள் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்து ஓய்வில் இருந்தால், அவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம், பெண் வர்த்தகர்கள் வங்கியில் கடன் பெற்று கடனைத் திருப்பிச் செலுத்தும் போது வட்டியில் தள்ளுபடி அளித்தல் போன்ற திட்டங்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications