அட ஆமாங்க, திரும்பவும் 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதுன்னு சொல்லிட்டாய்ங்க. ஆனா ஒரு சின்ன ட்விஸ்ட் இந்தியாவுல் இல்லங்க, இந்திய எல்லையில் இருக்குற ஹிந்து தேசமான நேபாளத்துல.
நேபாளம்
இந்திய ரூபாய் நோட்டுக்களைக் கொண்டு நேபாளத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நேபாள ரூபாயைப் போன்றே அங்கு இந்திய ரூபாயையும் சரளமாக பயன்படுத்தும் நேபாளிகள் அங்கு அதிகம். ஒரு இந்திய ரூபாய் என்பது 1.59 நேபாள ரூபாய்க்குச் சமம்.
ஞாயிற்றுக்கிழமையே
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியைப் போல நேபாளத்தின் மத்திய வங்கியான நேபாள் ராஷ்டிர வங்கி கடந்த ஞாயிற்றுக்கிழமையே இந்திய ரூபாய் நோட்டுக்களுக்கான தடை சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறது. நமக்கு வந்து சேரத் தான் கொஞ்சம் தாமதமாகிவிட்டது.
தடை
அந்த சுற்றறிக்கைப் படி, இனி நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுக்களில் 100 ரூபாய்க்கு மேல் அதிக மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுக்களான 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது. 100 ரூபாய் மற்றும் அதற்கு கீழ் உள்ள இந்திய ரூபாய் நோட்டுக்கள் வழக்கம் போல பயன்படுத்தலாம். இந்த தடை நேபாள தேசத்தவர்களுக்கும் பொருந்தும்.
கூடவே கூடாது
எக்காரணம் கொண்டும் இனி நேபாளத்தின் வியாபாரத்திலோ, வர்த்தகங்களிலோ 100 ரூபாய்க்கு அதிகமான மதிப்பு கொண்ட இந்திய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்துபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கண்டிப்பு காட்டி இருக்கிறது நேபாள ராஷ்டிர வங்கி.
கேபினெட் கூட்டம்
கடந்த டிசம்பர் 13, 2018-ம் தேதியே நேபாள கேபினெட் அமைச்சகத்தில் அதிக மதிப்பு கொண்ட இந்திய ரூபாய் நோட்டு செல்லாததை அறிவிக்க ஒப்புதல் பெற்றுவிட்டார்களாம். நேபாள அரசு கெஸட்டிலும் இந்த அறிவிப்பை வெளியிட்டு விட்டார்களாம்.
விமர்சனங்கள்
நேபாளத்தில் வியாபாரம் பார்க்கும் வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் நேபாளத்தின் இந்த முடிவை எதிர்த்து விமர்சித்து வருகிறார்களாம். இந்த முடிவு நாட்டின் பொருளாதார நிலையை பாதிக்கும், Visit Nepal என்கிற திட்டத்தின் மூலம் 2020-ம் ஆண்டில் 20 லட்சம் சுற்றுலா பயணிகளை கொண்டு வரும் திட்டத்துக்காக
மேற் கொண்ட பிரச்சாரம் எல்லாம் வீண் தானே என கடுப்பாகி இருக்கிறார்கள் வியாபாரிகள்.
நேபாளில் இந்தியர்கள்
ஓவர் லேண்ட் இந்தியன் விசிட்டர்ஸ் சர்வே (The overland Indian visitors' survey) என்கிற அறிக்கையில் இந்தியர்களைப் பற்றிய தகவல்களை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு தரை வழியாக வருபவர்கள் 12 லட்சம் பேர். விமான வழியாக வருபவர்கள் 1.6 லட்சம் பேர். ஒரு இந்தியர் சராசரியாக நேபாளத்தில் 5.8 நாட்கள் தங்குகிறார்கள். ஒரு இந்தியர் சராசரியாக 11,310 இந்திய ரூபாயை நேபாளத்தில் செலவு செய்கிறாராம். இப்போது இதெல்லாம் பழைய படி வருமா..? என்பதே சந்தேகம் தான் என வியாபாரிகள் வருத்தப்படுகிறார்கள்.
பிரச்னை
நேபாளத்தின் எல்லையில் இருக்கும் பெரும்பாலான இந்தியர்கள் அசால்டாக பிக்னிக் சென்று வரும் இடமாக, ஒரு சுற்றுலா தளமாக இருப்பது நேபாளம். இப்போது அவர்களுக்கான பணத்தை நேபாள ரூபாயாகவோ, டாலராகவோ, யூரோவாகவோ முறையாக கமிஷன் கொடுத்து மாற்றித் தான் நேபாளத்தில் செலவு செய்ய வேண்டும். இல்லை என்றால் 100 ரூபாய்க்கு கீழ் உள்ள இந்திய ரூபாய் நோட்டுக்களை கொண்டு வர வேண்டும்.
எங்களுக்கும் பிரச்னை தான்
ஏன் இந்த திடீர் தடை எனக் கேட்டால் "இந்தியாவில் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், இந்திய ரூபாய்களை வைத்திருந்த பெரும்பாலான நேபாள மக்களும் அவதிக்குள்ளானோம். இது குறித்து இந்திய தலைவர்களிடமும் பேச இருக்கிறேன்" என நேபாளத்தில் ப்ரீமியர் கே பி ஷர்மா ஒலி தெரிவித்தார்.