இந்தியாவில் மிகவும் பாவப்பட்ட ஜீவன்கள் என்றால் அது சம்பள தாரர்கள் தான். சம்பளதாரர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை, முக்கியமாகச் சம்பளத்தை வருமான வரித்துறையினரிடம் இருந்து மறைக்கவே முடியாது. ஆனால் பிசினஸ் செய்பவர்களுக்கு அப்படி கிடையாது. ஆண்டு இறுதியில் ஆடிட்டர் உதவியோடு, செலுத்த வேண்டிய வரித் தொகையை மிச்சப்படுத்த முடியும். இப்போது 350 கோடி ரூபாயை வரியாகச் செலுத்தாமல் ஒரு 10 நிறுவனங்களைப் பிடித்து கசக்கி வருகிறது வருமான வரித்துறை
நிறுவனங்கள் ஏமாற்றிய வரித் தொகை
வாசகர்கள் எளிதில் படிக்க நிறுவனங்களின் பெயர்கள் ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறோம்.
Crest Logistics and Engineers - 110 கோடி ரூபாய்
Hub town - 65 கோடி ரூபாய்
HCC - 50 கோடி ரூபாய்
Essar Shipping, Essar Projects, Essar Oilfield services - 40 கோடி ரூபாய்
Lodha Developers - 20 கோடி ரூபாய்
Centre for Digestice and kidney Disease - 15 கோடி ரூபாய்
Eros International - 19 கோடி ரூபாய்
Bombay Rayon - 14 கோடி ரூபாய்
E apparel - 5 கோடி ரூபாய்
3i Infotech - 5 கோடி ரூபாய்
டிடிஎஸ்
நமக்கே சில நேரங்களில் 20,000 ரூபாய்க்கு மேல் சிங்கிள் பேமெண்டாக ஒரு நிறுவனத்திடமிருந்து காசோலை அல்லது வங்கி மூலம் நமக்கு பணம் செலுத்துகிறார்கள் என்றால் டிடிஎஸ் (TDS - Tax Deducted At Source) பிடித்திருப்பார்கள். அவ்வளவு ஏன் இந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச் போன்ற மாதங்களில் சம்பளதாரர்களுக்கு சம்பளம் கொடுக்கும் போதே அரசாங்கத்துக்கு நாம் செலுத்த வேண்டிய வரியை நம் சம்பளத்தில் பிடித்தம் செய்து நம் நிறுவனம் செலுத்தி விடும்.
இது தான் பிரச்னையா..?
இப்போது மேலே சொன்ன 10 நிறுவனங்களையும் சேர்த்து மொத்தமாக 350 கோடி ரூபாயை யாரிடம் இருந்து பிடித்தம் செய்ய வேண்டுமோ அதை முறையாக பிடித்தம் செய்துவிட்டார்கள். ஆனால் வருமான வரித் துறையினரிடம் அதைக் குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தவில்லை என்பது தான் பிரச்னை.
எதற்கு எல்லாம்
நிறுவனங்கள் கொடுக்கும் சம்பளம், நிறுவனம் செலுத்திய வாடகைகள், காண்டிராக்டர்களுக்கு பிடித்தம் செய்த தொகைகள் என பல்வேறு வருமான வரி சட்டத்தின் கீழ் பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை அரசிடம் செலுத்தவில்லை.
மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்
இப்படி பிடித்தம் செய்த தொகை குறிப்பிட்ட காலத்தில் அரசிடம் செலுத்தவில்லை என்றால், யார் பெயரில் பிடித்தம் செய்தோமோ, அவர்களுக்கு வரி வரவு வைக்கப்படாது. இதனால் வருமான வரித்துறையினருக்கு பிடித்தம் செய்யப்பட்டவர்களால் அழுத்தம் கொடுக்கப்படும்.
உதாரணம் 1
எஸ்ஸார் நிறுவனம் ராம் என்ற ஊழியருக்கு மாதம் 50,000 ரூபாய் சம்பளம் கொடுக்கிறது. ஆக ஆண்டுக்கு 6,00,000 ரூபாய். இப்போது ராமிடம் இருந்து மொத்தம் 22,500 ரூபாயை டிடிஎஸ் முறையில், வருமான வரிக்காக பிடித்தம் செய்ய வேண்டும். எஸ்ஸார் நிறுவனமும் 22,500 ரூபாயை பிடித்தம் செய்துவிட்டார்கள். ஆனால் அரசிடம் செலுத்தவில்லை.
உதாரணம் 2
இப்போது ராம் தான் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும் என தன் வருமான வரிவலைதளத்தில் லாக் இன் செய்து பார்த்தால் 22,500 ரூபாய் எனக் காட்டும். இப்போது பயந்து போய் வருமான வரியிடம் ஓடினால் நிறுவனம் இன்னும் டிடிஎஸ் செலுத்தவில்லை எனச் சொல்வார்கள். இப்படி 10,000 பேர் கடிதம் எழுதினால் வருமான வரித் துறையினர் என்ன ஆவார்கள். இப்படி முறையாக பிடித்தம் செய்ததை அரசிடம் கொடுக்கவில்லை என்றால் யாராலும் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. அதையும் மீறிச் செய்ய வேண்டும் என்றால் கை காசைப் போட்டு வரியை முழுமையாகச் செலுத்திவிட்டு தான் வருமான வரி தாக்கல் செய்ய முடியும்.
என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள்
2012 - 13 நிதி ஆண்டு தொடங்கி 2017 - 18 நிதி ஆண்டு வரை பல தவறுகளைக் கண்டு பிடித்திருக்கிறோம். இந்த நிறுவனங்கள் செய்த தவறுகளால் இவர்களிடம் பிசினஸ் செய்த பல நிறுவனங்கள் இன்னும் வருமான வரியைக் கூட தாக்கல் செய்யாமல் இருக்கிறார்கள். சில நிறுவனங்கள் மட்டும் ஒழுங்காக வருமான வரி சொல்லும் அபராதத்தைச் செலுத்த முன் வந்திருக்கிறார்கள். வேறு சில நிறுவனங்கள் தங்கள் பிசினஸ் நிலையை விவரித்து மன்னிப்பு வழங்க வேண்டி இருக்கிறார்கள்.
ஹெசிசி பதில்
"எங்கள் நிறுவனம் எப்போதுமே வருமான வரித்துறையினரோடு இணைந்து செயல்பட, எங்களை சரி செய்து கொள்ளத் தயாராகவே இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் எங்கள் நிறுவனம் தாமதமாக டிடிஎஸ் தொகையினை அரசாங்கத்திடம் செலுத்தியதற்கு எங்கள் பிசினஸ் பணம் சில இடங்களில் தங்கிவிட்டது தான் காரணம் இதை வருமான வரித் துறை அதிகாரிகளிடமும் விளக்கி இருக்கிறோம்" என இதைப் பற்றி விசாரித்த போது பதில் அளித்திருக்கிறார்கள்.
எஸ்ஸார் பதில்
எஸ்ஸார் குழும நிறுவனங்கள் இன்றைய தேதி வரை எல்லா வரிகளையும் ஒழுங்காகச் செலுத்தி வருகிறது. எங்கள் குழுமத்தின் சில நிறுவனங்கள் மட்டும் அவர்களின் பிசினஸ் சைக்கிள் காரணமாக கொஞ்சம் தாமதமாக செலுத்தி இருக்கிறார்கள். அதையும் வருமான வரித்துறையோடு பேசி வருகிறோம் எனப் பதிலளித்திருக்கிறார்கள்.
மற்ற நிறுவனங்கள் இதைக் குறித்து இதுவரை வாய் திறக்கவில்லையாம்.