கடனை இன்றைய நுகர்வோர் சமூகம் ஒரு வளர்ச்சியின் குறியீடாகவே பார்க்கிறது. அதற்குச் சான்று தான் பெங்களூரூ. பேங்க் பசார் எனும் தனியார் நிறுவனத்தின் 2018-ம் ஆண்டு அறிக்கையில் சில சுவாரஸ்யத் தகவல்கள் இதோ... இந்த தகவல்கள் எல்லாமே பேங்க் பசார் மூலம் வாங்கிய கடன்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு தயாரித்திருக்கிறார்கள்.
தனி நபர் கடன் (Personal loan)
இந்தியாவில் தனி நபர் கடனில் அதிகம் கடன் வாங்கியவர் பெங்களூரைச் சேர்ந்தவர். ஒரே முறையில் 47.2 லட்சம் ரூபாய் கடனாக வாங்கி இருக்கிறார். பெங்களூரில் சராசரியாக தனி நபர் கடன் 2.7 லட்சம் ரூபாய் வாங்குகிறார்கள். இந்தப் பட்டியலில் சென்னைவாசிகளுக்கு ஐந்தாவது இடம் தான்.
சென்னையில் தனி நபர் கடன்
சென்னையில் ஒரு நபர் அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வாங்கி இருக்கிறார். சென்னையிலும் சராசரியாக தனி நபர் கடன் வாங்குபவர்கள் 2.7 லட்சம் ரூபாய் வாங்குகிறார்கள். சராசரி அடிப்படையில் மும்பை 2.8 லட்சம் ரூபாயோடு முதலிடத்தில் இருக்கிறது.
வாகனக் கடன்
வாகனக் கடனிலும் (கார் கடன்கள் மட்டும்) பெங்களூரு தான் முதலிடத்தில் இருக்கிறது. பெங்களூரில் அதிகபட்சமாக ஒரு நபர் 49.9 லட்சம் ரூபாய் கார் கடன் வாங்கி இருக்கிறார். சென்னை நபர் 46.8 லட்சம் கடன் வாங்கி இரண்டாமிடத்திலும், தில்லி நபர் 21.8 லட்சம் ரூபாய் கடன் வாங்கி மூன்றாமிடத்திலும் இருக்கிறார்கள்.
டயர் 2 மற்றும் டயர் 3
இந்தியாவின் மெட்ரோ நகரங்களைத் தவிர மற்ற சிறு நகரங்களில் கார் இன்னும் சொகுசாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்கத்தைச் சேர்த்து ஒரு நபர் 12.9 லட்சம் ரூபாய்க்கு கார் கடன் வாங்கி இருக்கிறார். அது தான் மொத்த இந்திய நகர் புறத்துக்கும் அதிகமான கடன் தொகையாம்.
பகுதி நகர் புறம் & கிராம புறம்
பகுதி நகர் புறங்களில் (Semi Urban) அதிகபட்ச கார் கடன் தொகையாக 5.7 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்களாம். ஆனால் கிராம புறங்களில் அதிகபட்ச கார் கடன் தொகையாக 5.2 லட்சம் ரூபாய் மட்டுமே கடன் வாங்கி இருக்கிறார்களாம்.
வீட்டுக் கடனில்
வீட்டுக் கடன்ல் தில்லிவாலாக்கள் அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் வாங்கி முதலிடத்திலும், சென்னைவாசிகள் 2.2 கோடி ரூபாய் கடன் வாங்கி இரண்டாமிடத்திலும், 1.8 கோடி ரூபாய் கடன் வாங்கி மும்பை வாசிகள் மூன்றாமிடத்திலும் இருக்கிறார்களாம். ஆக வீடு போன்ற அதிக நிலையான சொத்துக்கள் மீது கடன் வாங்குவதில் பெங்களூரூ பின் தங்கிவிட்டது.
அதெல்லாம் கிடையாதுங்க
இந்த அறிக்கைக்கு முரணாக ஒரு எஸ்பிஐ ஊழியர் "என்னைப் பொறுத்த வரை தனி நபர் மற்றும் கார் கடன்களில் மும்பை நகரம் தான் முதலிடம் பிடிக்கும். பெரும்பாலான கடன் விவரங்களை மும்பை வாலாக்கள் வங்கிகளுக்கே நேரடியாக வந்து கேட்டுச் செல்கிறார்கள். எனவே இந்த பேங்க் பசார் அறிக்கையை பெரிதாக நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை" என்கிறார்.