சென்னை: தமிழகம் தொழில் துறையில் சோழர் காலம் முதலே முன்னேறிய மாநிலம் என்று புகழாரம் சூட்டியுள்ளார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
சென்னையில் புதன்கிழமை சர்வதேச முதலீட்டாளர்களின் 2 நாள் மாநாட்டில், நிர்மலா சீதாரமன் பங்கேற்று பேசியதாவது:

தமிழகம் இன்று, நேற்று தொழில்துறையில் வளரவில்லை. சில பத்தாண்டுகள் முன்பு வளர ஆரம்பிக்கவில்லை. ஆனால் நூற்றாண்டு காலமாக தமிழகம் தொழில் துறையில், வணிகத்தில் முன்னேறிய மாநிலம். எனவே தமிழகத்திற்கு முதலீட்டாளர்கள் பெருமளவு வரவேண்டும்.
தமிழர்கள் தங்களது திறமையை இந்தியாவில், மட்டுமின்றி உலகம் முழுக்க பல நாடுகளிலும் நிரூபித்துள்ளனர். தமிழர்கள் உலகின் பல நாடுகளிலும் பரவி வாழ்ந்து வருகிறார்கள். தங்களது கலாச்சார முத்திரையை செல்லும் இடங்களில் எல்லாம் பதித்துள்ளனர்.
கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர்வாட் கோயிலும், தஞ்சையில் உள்ள கோயில்களும் ஒரே மாதிரியானவை. சோழ மன்னர்கள் எங்கெல்லாம் சென்றனரோ அங்கெல்லாம் தமிழர்களின் கலாச்சாரத்தை பரப்பினர்.
சோழர்கள் காலத்தில் கப்பல்கள் மூலம் பல நாடுகளுக்குச் சென்றனர். பூம்புகார் மிகப் பெரிய துறைமுகமாக செயல்பட்டது. தமிழகத்தில் உள்ள, பல்வேறு கல்வெட்டுகள், வணிகம் மற்றும் தொழில் குறித்து பேசுகின்றன.
சோழர் காலத்திலேயே தமிழகத்தில் தொழில்துறைக்கான அமைப்புகள் செயல்பட்டன. நாம் இப்போதுதான் இதுபோன்ற சங்கங்களை பார்த்துள்ளோம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.


Click it and Unblock the Notifications