மும்பை: நாட்டின் 12 முன்னணி மாநிலங்களில் வளர்ச்சி விகிதம் சிறப்பாக இருந்தாலும் அங்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை என்று கிரைசில் அறிக்கை தெரிவித்துள்ளது.
பெரிய மாநிலங்கள் வரிசையில் ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள்தான் இருப்பதிலேயே படு மோசமாம். இதில் ராஜஸ்தான், ம.பியில் இதுவரை பாஜக ஆட்சி இருந்து வந்தது. சமீபத்திய தேர்தலில்தான் இங்கு காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. ஜார்க்கண்ட் மாநிலத்திலும் தற்போது பாஜக ஆட்சிதான் நடந்து வருகிறது என்பது சுவாரஸ்யமானது.
12 மாநிலங்களிலும் ஒட்டுமொத்த ஜிடிபி விகிதம் நன்றாக இருந்தாலும் கூட அங்கு போதிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று கிரைசில் கவலை தெரிவித்துள்ளது.
வளர்ச்சி மட்டுமே
இந்திய ரிசர்வ் வங்கியின் சிறப்புப் பிரிவு பட்டியலில் மொத்தம் 17 மாநிலங்கள் உள்ளன. அதில் 12 மாநிலங்களில்தான் நிலைமை இந்த அளவுக்குக் கவலைக்கிடமாக உள்ளது. இந்த மாநிலங்களில் தேசிய பொருளாதார வளர்ச்சியானது 2018ம் நிதியாண்டில் 6.7 சதவீதத்திற்கும் மேலான வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால் போதிய வேலைவாய்ப்புகளை இவை உருவாக்கவில்லை.
சமமான வளர்ச்சி இல்லை
பெரிய மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்களில் வளர்ச்சி சமமமாக இல்லை என்றும் கிரைசில் கவலை தெரிவித்துள்ளது. பெரிய மாநிலங்களின் தனி நபர் வருவாய்க்கு ஈடு கட்டும் வகையில் குறைந்த வருவாய் ஈட்டும் மாநிலங்களின் தனி நபர் வருமானம் கூடவில்லை என்று கிரைசில் தெரிவித்துள்ளது.
குறைவான வேலைவாய்ப்புகள்
11 மாநிலங்களில் புதிய வேலைவாய்ப்புகள் மிகக் குறைந்த அளவிலேயே உருவாகியுள்ளன. குறிப்பாக உற்பத்தித் துறை, கட்டுமானம், வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் தேசிய விகிதாச்சாரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த அளவிலான வேலைவாய்ப்புகளே உருவாகியுள்ளன.
பாஜகவின் பங்கு
குஜராத், பீகார், ஹரியானா ஆகியவை நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ள மாநிலங்களில் முதல் இடங்களில் உள்ளன. ஆனால் இங்கு குறைந்த அளவிலான வேலைவாய்ப்புகளே உருவாகியுள்ளன. மேற்கண்ட 3 மாநிலங்களில் 2ல் பாஜக ஆட்சியில் உள்ளது. பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடைசி இடங்களில் ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேச மாநிலங்கள் உள்ளன என்று கிரைசில் தெரிவித்துள்ளது.