தனியார் வங்கிகளிடம் எல்லாம் இஷ்டத்துக்கு கடன் வாங்க முடியாது. ஏமாற்ற வேண்டும் என்றால் அரசு வங்கிகள் தான் என்கிற நிலை தான் இந்தியாவில் வெகு நாட்களாக இருந்து வருகின்றன. ஆனால் சந்தா கோசாரின் கணவர் தீபக் கோச்சாருக்கு ஐசிஐசிஐ நிறுவனம் கோடிக் கணக்கில் கடன் கொடுத்து அதை பொய் ஆக்கியது.
சிபிஐ
இன்று காலையில் இருந்து வீடியோகான் நிறுவன அலுவலகங்கள் மற்றும் தீபக் கோச்சாரின் நிறுவனமான நியூபவர் ரெனிவபிள்ஸ் அலுவலகங்களில் சிபிஐ தன் விசாரனை மற்றும் ரெய்டு நடத்தி வருகிறது. மும்பை, அவுரங்காபாத் என இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஒரே நேரத்தில் வீடியோகான் கடன் சம்பந்தப்பட்ட இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறதாம்.
சந்தா கோச்சர்
சிபிஐ தன் முதல் நிலை விசாரணை தொடங்கி சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு ஐசிஐசிஐ வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கிய கடன் பிரச்னை மீது வழக்கு தொடுத்திருக்கிறது. இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் ஐசிஐசிஐ தலைவர் சந்தா கோச்சாரின் பெயர் இருக்கிறதா, இல்லையா என ஐசிஐசிஐ இயக்குநர்கள் குழு வட்டாரம் மொய்த்து வருகிறார்களாம்.
முதல் நிலை விசாரணை
முதல் தகவல் அறிக்கையில் பெரும்பாலும் சந்தா கோசாரின் பெயரும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்றே முன்னாள் சிபிஐ ஊழியர் கணித்திருக்கிறாராம். காரனம் சிபிஐ-ன் முதல் நிலை விசாரணைக்கு அன்றைய சிபிஐ இயக்குநர் அனுமதி அளித்த போது சந்தா கோச்சார், வேணு கோபால் தூத் மற்றும் தீபக் கோச்சார் என மூன்று பேரின் பெயரையும் சேர்த்து தான் வாங்கினார்கள் என காரணம் சொல்கிறாராம்.
கொஞ்சம் வரலாறு
2010-ல் வீடியோகான் நிறுவனத்தைச் சேர்ந்த வேணு கோபால் தூத் தன் துணை நிறுவனத்தின் மூலம், சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் சில நிறுவனங்களுக்கு ப்ரொமோட்டர் என்கிற முறையில் 64 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். அதை வைத்து company NuPower Renewables Pvt Ltd (NRPL) என்கிற நிறுவனம் தொடங்கி கொஞ்சம் நாள் ஓட்டி இருக்கிறார் தீபக்.
ஐசிஐசிஐ கடன்
கொஞ்ச நாள் ஓட்டிய நிறுவனத்தை ஐசிஐசிஐ வங்கியிடம் காட்டி, மனைவியின் செல்வாக்கை பயன்படுத்தி சுமார் 3250 கோடி ரூபாய் கடன் பெற்றார். இது நடந்தது 2012-ல். இந்த 3250 கோடி என்பது எஸ்பிஐ தலைமையில் 20 சேர்ந்து கொடுத்த 40,000 கோடி ரூபாய் கடனில் ஒரு பகுதி தான் என்பது பின்னால் தெரிய வருகிறது.
பெயர் மாற்றம்
இத்தனை கடன்கள் எல்லாம் வாங்கிய பின் தன் ஓனர் என்கிற உரிமையை வேறு ஒரு டிரஸ்டுக்கு வெறும் 9 லட்சம் ரூபாய்க்கு மாற்றுகிறார் திபக் கோச்சார். அதுவும் கடன் வாங்கிய ஆறு மாதங்களிலேயே..! என்பது தான் அதிகாரிகளை யோசிக்க வைக்கிறது.
விசாரணை
சிபிஐ முதல் நிலை விசாரணையில் சந்தா கோச்சர் தொடங்கி பெயருக்கு தொடங்கிய company NuPower Renewables Pvt Ltd (NRPL) ஊழியர்கள் வரை பலரையும் உரித்து உரித்து விசாரித்திருக்கிறது சிபிஐ. எப்போதும் முதல் நிலை விசாரணை தொடங்கி 90 நாட்களுக்குள் வழக்கு தொடுக்கும் சிபிஐ ஐசிஐசிஐ விஷயத்தில் நிதானமாக தேவையான ஆதாரங்களை திரட்டி வழக்குக்கு வலு சேர்த்திருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் சொல்கிறார்கள்.
செபி வழக்கு
சிபிஐ ஒரு இடத்தில் நெருக்குகிறது என்றால் செபி அமைப்பும் ஐசிஐசிஐ வங்கியை கண்டமேனிக்கு கேள்விக் கேட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய தொகையை, கணவரின் நிறுவனத்துக்கு கடனாக கொடுத்து, வங்கி முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக கசக்கிக் கொண்டிருக்கிறது செபி. இதை எல்லாம் தாண்டி ஐசிஐசிஐ என்றால் சந்தா கோச்சார் தான், சந்தா கோச்சார் என்றால் ஐசிஐசிஐ தான் என வங்கி மேல் மட்ட அதிகாரிகள் ஜபம் செய்து கொண்டிருக்கிறார்களாம்.