டெல்லி: தேசிய ஓய்வூதிய திட்டம் 100 சதவீத வரி விலக்கின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
தேதிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. திங்கள்கிழமை இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி, ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் திரும்பப் பெறப்படும் 60 சதவீதத் தொகைக்கும் முழுமையான வரி விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசுஅறிவித்துள்ளது.
இதற்கு முன்பு, 60 சதவீதத்தில் 40 சதவீத தொகைக்கு வரி விலக்கும் மீதமுள்ள 20 சதவீதத்துக்கு வரி வசூலிப்பும் நடைமுறையாக இருந்தது. மீதமுள்ள 40 சதவீதம் ஆண்டு திட்டத்தில் முதலீடு செய்யப்படுகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள பொது சேமக் கணக்கு நிதி மற்றும் ஊழியர் சேம நல நிதி ஆகியவற்றுக்கு முழுமையான வரி விலக்கு உள்ளது. தற்போது இந்த வரிசையில் தேசிய ஓய்வூதிய திட்டதாரர்களும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்றையுமே ஓய்வூதிய நிதி முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி ஆணையம்தான் கையாளுகிறது.
இந்த மூன்று திட்டங்களிலும் பணம் டெபாசிட் செய்யும் போதும், வட்டி ஈட்டும் போதும், பணத்தை திரும்ப பெறும் போதும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மேலும் ஒரு முக்கிய மாற்றத்தை மத்திய அரசு செய்துள்ளது. அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு அளிக்கும் பங்களிப்பு 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் ஓய்வூதியதாரர்கள் கூடுதல் பலனடைவர்.