பட்ஜெட் 2019: இடைக்கால பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகளை அருண்ஜெட்லி நிறைவேற்றுவாரா

சென்னை: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பிப்ரவரி 1 ஆம் தேதி தனது கடைசி இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் லோக்சபா தேர்தல் வரவுள்ளதால் இந்த பட்ஜெட்டில் பல அதிரடி அறிவிப்புகள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மோடி அரசுக்கு பல சவால்களும் காத்திருக்கின்றன.

ஏப்ரல் முதல் அடுத்த நிதியாண்டு ஆரம்பிக்கும் என்பதால் புதிய அரசு பதவியேற்கும் வரை நிதி சார்ந்த நடவடிக்கைகள் சீராக நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மத்தியில் மீண்டும் புதிய அரசு பதவியேற்றவுடன், புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். லோக்சபா தேர்தல் வரவுள்ளதால் இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு சாதகமான அறிவிப்புகளை அருண்ஜெட்லி வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேசம், ராஜஸ்தான்,சட்டீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களிலும் பாஜக தோல்வியடைந்துவிட்டது. ஆட்சியையும் பறிகொடுத்தது. அதை மனதில் வைத்து மோடி தலைமையிலான அரசு, மக்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரூ. 5 லட்சம் வருமானவரி விலக்கு

ரூ. 5 லட்சம் வருமானவரி விலக்கு

ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். 5 முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 10 சதவீத வரியும், 10 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான ஆண்டு வருமான உள்ளவர்களுக்கு 20 சதவிகித வரியும், 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் இருக்கும்போது 25 சதவிகிதத்தை வரியாகச் செலுத்துவது போல திருத்தங்கள் வேண்டும் என்று வணிகர்களும், தொழில் துறையினரும் மாத சம்பளம் வாங்குபவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டால் மாத சம்பளத்தில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

தொழில்துறையினர் கோரிக்கை

தொழில்துறையினர் கோரிக்கை

கார்ப்ரேட் வரியையும் 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கலாம். குறைந்த கால மூலதன ஆதாயம் மீதான வரியை மட்டும் வைத்துக்கொண்டு, நீண்ட கால மூலதன ஆதாயம் மீதான வரியை நீக்க வேண்டும் என்பதும் தொழில் துறையினரின் கோரிக்கையாகும்.

இவற்றை நிறைவேற்றினால் நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சனைகளை கையாளுவது மத்திய அரசுக்கு சவாலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது புதிய அதிரடி அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. அதேபோல இந்த இடைக்கால பட்ஜெட்டும் அமைந்து விடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

ஜஸ்வந்த் சிங் பட்ஜெட்

ஜஸ்வந்த் சிங் பட்ஜெட்

நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சிங், அப்போது நடைமுறையில் இருந்த சில திட்டங்களை மேலும் பலருக்கு உதவும் வகையில் விரிவுபடுத்தினார். சில பொருட்களுக்கு வரி முறையை சுலபமாக்கினார். விமான நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் பொருட்களின் அளவை அதிகமாக்கினார். அதற்கான சுங்க வரியையும் குறைத்தார். இது நடுத்தர வகுப்பினருக்குப் பயன்தரும் வகையில் அமைந்தது. அதே நேரத்தில் எந்தவித வரிக் குறைப்பு நடவடிக்கையையும் அவர் அறிவிக்கவில்லை.

பிரணாப் முகர்ஜி பட்ஜெட்

பிரணாப் முகர்ஜி பட்ஜெட்

2009-10 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு முன்னரே, தேசிய அளவில் விவசாயக் கடன் ரத்து அறிவிப்பை வெளியிட்டது காங்கிரஸ். அதுவே, மீண்டும் அந்தக் கட்சி ஆட்சிக்கு வர துணையாக இருந்தது எனக் கூறப்படுகிறது. அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, இடைக்கால பட்ஜெட்டில் எந்த அதிரடி அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. அவர், சட்ட சாசனத்தின்படி, 2009-10 நிதியாண்டுக்கான வரி மற்றும் செலவுகளை புதிதாக அமையப் போகும் அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

ப. சிதம்பரம் பட்ஜெட்

ப. சிதம்பரம் பட்ஜெட்

லோக்சபா தேர்தல் வர இருந்த நிலையிலும் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில்தான் பட்ஜெட் அமைந்திருந்தது. அதே நேரத்தில் வாகனத் துறை மற்றும் சில அத்தியாவசியப் பொருட்களுக்கு கலால் வரியைக் குறைத்தார் சிதம்பரம். வளர்ச்சியைப் பிரதானப்படுத்தி பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். இந்த இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யப்போகும் அருண் ஜெட்லி தேர்தலை மனதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுவாரா மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அறிவிப்புகளை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில் சில சவால்களையும் சந்திக்க வேண்டும்.

 

 

சலுகை கிடைக்குமா

சலுகை கிடைக்குமா

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அருண் ஜெட்லி வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாகவும் மூத்த குடிமக்களுக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாகவும் அதிகரித்து அறிவித்தார்.

சிகரெட் மீதான வரி 72 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது. குட்கா மீதான வரி 60-ல் இருந்து 70 சதவிகிதமாகவும், பான் மசாலா வரி 12 சதவிகிதத்தில் இருந்து 16 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளன. குளிர்பானங்களுக்கான கலால் வரி 5 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டது.

 

 

தனிநபர் வருமானத்திற்கு வரி

தனிநபர் வருமானத்திற்கு வரி

கடந்த 2017-18 நிதியாண்டு பட்ஜெட் அறிவிப்பில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஈட்டுபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 10% வரி 5% ஆக குறைக்கப்பட்டது. ரூ.50 கோடிக்கு குறைவாக ஆண்டு வருமானம் இருக்கும் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 30 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

நிரந்தர வரி கழிவு

நிரந்தர வரி கழிவு

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படவில்லை. இருப்பினும் நிரந்தர வரிக் கழிவு சலுகை ரூ 40 ஆயிரம் வரை அளித்தது ஓரளவு ஆறுதலாக அமைந்தது. மூத்த குடிமக்களுக்கு சேமிப்பு மீதான வட்டிக்கு விதிக்கப்படும் வரி விலக்கு ரூ. 50 ஆயிரம் வரை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல மருத்துவக் காப்பீடுகளுக்கு ரூ. 50 ஆயிரம் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் அருண்ஜெட்லி வெளியிடும் அறிவிப்புகளால் மட்டுமே மோடி ஆட்சியை தக்க வைப்பதற்கான அடித்தளமாக அமையும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+