தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாடு பயங்கரமாக நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய நாளின் நிறைவாக இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். இனி அவர் மொழியில்
எனக்கு நெருக்கம்
"தமிழும், தமிழ்நாடும் எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானவை. இதை என்னைச் சுற்றி இருப்பவர்களிடம் அடிக்கடி சொல்லிப் பகிர்வதும் உண்டு. இந்திய தாய்த் திரு நாட்டில் மிக அழகான மாநிலம் தமிழ்நாடு. தமிழ் உலகின் பழமையான மொழிகளில் ஒன்று, இனிமையான மொழிகளில் ஒன்று, அப்படிப்பட்ட தமிழ் பூமில், தமிழ் நாட்டில் நீங்கள் முதலீடு செய்ய வந்திருக்கிறீர்கள்.
உழைப்பாளிகள்
இந்திய நாட்டின் ஓழும் கால்களைப் போல இருக்கும் தமிழகத்தில் திறமையாகவும், கடினமாகவும் உழைக்கும் தொழிலாளர்கள் ஏராளமாக உள்ளனர். அதனால் தானோ என்னவோ இந்திய மாநிலங்களில் தமிழகம் எப்போதும் முன்னிலை வகிக்கிறது. மத்திய-மாநில அரசுகள் இடையே போதிய ஒத்துழைப்பு இருப்பது முக்கியமானது. அதையும் தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது. தமிழகத்தில் முதலீட்டை விதைக்கும் முதலீட்டாளர்கள் சிறந்த அறுவடையை பெறுவர். அதாவது இன்று முதலீடு செய்பவர்கள் நாளை நல்ல வருமானத்தைப் பெறுவார்கள்.
உலகம் ஒரு குடும்பம்
ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என்பதே இந்தியாவின் தத்துவம். அதை இந்தியர்கள் அனைவரும் பின் பற்றி வருகிறோம். இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் இளைஞர்கள் என்பது கவனிக்கத்தக்கது. இந்த இளைஞர்களுக்குத் தான் இத்தனை பிரயத்தனங்களும். ஒரு கடலோர மாவட்டமான நாகப்பட்டினத்தில் இத்தனை பெரிய முதலீடுகளைச் செய்ய ஒரு நிறுவனம் முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதை நாங்கள் வரவேற்கிறோம். பல துறைகளில் இன்று தமிழகம் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக போக்குவரத்து, தொலைத்தொடர்வு உள்ளிட்டவைகளில்.
தீர்வு காண்போம்
தொழில்முனைவோர்களை, குறிப்பாக சிறு குறு தொழில் செய்பவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி வரவேற்க இந்தியா எப்போதும் தயாராக உள்ளது. உலக அளவில் தொழில் முனைவோருக்கான நல்ல சூழல்கள் அதிகம் இருக்கும் இரண்டாவது நாடு இந்தியா தான். பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, விரைவிலேயே சீனாவை முந்தும் என முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கூறினார். அதை இது போன்ற மாநாடுகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவில் விவசாயத் துறையில் சில பிரச்சனைகள் இருப்பது உண்மை தான். ஆனால் அவை அனைத்தும் தீர்க்கப் படக் கூடியவைகளே. அந்த பிரச்னைகளை விரைவில் தீர்ப்போம்" என துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு பேசி முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தினார்.
மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்புபவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. கருப்பு பணத்தை மீட்க வெளிநாடுகளுடன் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன என உரையை நிறைவு செய்யும் போது தமிழில் நன்றி என கூறினார்.


Click it and Unblock the Notifications