காந்தி நகர்: அமுல் நிறுவனம் ஒட்டகப் பால் பாட்டில் விற்பனையைத் தொடங்கியுள்ளது. குஜராத்தின் காந்திநகர், அகமதாபாத் மற்றும் கட்ச் பகுதிகளில் ஒட்டகப்பால் அரை லிட்டர் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டகப் பால் எளிதாக ஜீரணமாகும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குத் தேவையான இன்சூலின் போன்ற பல மருத்துவக் குணங்களைக் கொண்டது என்று கூறியுள்ளது.
பசும்பால், எருமைப்பாலில் தயாரித்த டீ, காபி சாப்பிட்டிருப்போம். தமிழக கிராமங்களில் ஆட்டுப்பால், ஏன் கழுதைப்பால் கூட குடித்திருப்பார்கள். ஒட்டகப்பால் பற்றி யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.
ஒரு படத்தில் ஒட்டகப்பாலில் டீ போடுப்பா என்று டீ கடைக்காரரிடம் கேட்பார் வடிவேலு. அது காமெடிக்காக வைக்கப்பட்ட வசனமாக இருந்தாலும் இப்போது அது உண்மையாகி வருகிறது.
இந்திய சந்தையில் ஒட்டகப் பாலுக்கு உள்ள வரவேற்பைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ராஜஸ்தான் பால் சங்கம் (ஆர்எம்எஃப்) அண்மையில் ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் விற்பனையை அறிமுகப்படுத்தியது. தற்போது ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் ஜெய்ப்பூர், பிகானிர், புதுடெல்லி மற்றும் புதுடெல்லியில் உள்ள சராஸ் பால் கடைகளில் கிடைக்கின்றன.
வாடிக்கையாளர்களுக்கு ஒட்டகப் பாலின் மருத்துவ குணங்கள் தெரிந்திருந்த போதிலும், நகர்ப்புறங்களில் ஒட்டகப் பால் கிடைப்பதில்லை. இதனையடுத்தே ஆர்எம்எஃப்ன் சராஸ் கடைகளில் இது கிடைக்கிறது. ஒட்டகப் பாலில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் தவிர ஆண்மையின்மையை போக்கக்கூடிய திறனுடன் சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில், ஒட்டகப் பாலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக ஆர்எம்எஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போல அமுல் ஒட்டகப் பால் 500 மில்லி லிட்டர் பாட்டில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை மூன்று நாட்கள் வரை குளிர்சாதன பெட்டிகளில் பதப்படுத்தி வைக்க முடியும். முன்னதாக ஒட்டகப் பாலில் சாக்லேட்டுகளையும் அமுல் அறிமுகம் செய்த அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இதனையடுத்தே ஒட்டகப்பால் விற்பனையை அமுல் தொடங்கியுள்ளது.
ஒட்டகப் பால் அறிமுகம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அமுல் நிறுவனம், சில நாட்களுக்கு முன்னதாக, ஒட்டகப் பால் சாக்லேட் அறிமுகம் செய்தோம். அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே ஒட்டகப் பாலையும் அறிமுகம் செய்தோம். மேலும் ஒட்டகப் பாலில் இன்சுலினுக்கு இணையான புரதம் இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை செய்யும் எனத் தெரிவித்திருக்கிறது.
பாலைவனத்தின் கப்பல் என்று போற்றப்படும் ஒட்டங்களுக்கு சுமை சுமப்பது மட்டும் வேலை அல்ல; இன்சுலினை சுரக்கச் செய்யும் பாலையும் கொடுக்கக் கூடியதுதான் ஒட்டகம் என்பதால் ராஜஸ்தான், குஜராத்தில் ஒட்டகத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. டீ கடைக்குப் போய் இனி தைரியமாக ஒட்டகப்பாலில் டீ போடுப்பா என்று வடிவேலு பாணியில் கேட்கலாம். கடைக்காரர் அதற்கு கேட்கும் விலையை கேட்டு நீங்கள் மயங்கி விழுந்து விடாமல் இருந்தால் சரிதான்.