மத்திய அரசோ மாநில அரசுகளோ அனைவரும் விவசாயிகளுக்குக் கொடுக்கும் மானியங்களை நிறுத்த வேண்டும். கட்டாயமாக கடன் தள்ளுபடி போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. இது இந்தியப் பொருளாதாரத்தையே கேள்விக் குறியாக்கி விடும் எனச் சொல்லி இருக்கிறார், இந்தியாவின் முன்னாள் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்.
குறைந்தபட்ச ஊதியம்
நம் இந்திய விவசாயிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் அல்லது ஆண்டுக்கு 18,000 ரூபாய் கொடுக்கிறார்கள் என்றால் இந்தியாவின் மொத்த ஜிடிபியின் வெறும் 2.64 லட்ச்சம் கோடி தான் செலவாகும். ஆனால் இதையே மானியமாகவோ, வங்கிக் கடனாகவோ கொடுத்தால் ஜிடிபி கணக்கீட்டில் பிரச்னை வரும் என எச்சரித்திருக்கிறார். அதோடு எக்காரணம் கொண்டும் இந்திய அரசு ஆர்பிஐ-ன் ரிசர்வ்களில் இருந்து விவசாயிகளுக்கான பணத்தைக் கொடுக்கக் கூடாது எனவும் சொன்னார்.
தெலுங்கானா முன்னோடி
தெலுங்கானாவில் ஒரு பருவத்துக்கு குறைந்தபட்சம் 4,000 ரூபாய் கொடுப்பது போல இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஒரு பொதுவான நிரந்தர குறைந்தபட்ச ஊதியத் திட்டத்தைக் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறார். இந்த தொகை விவசாயிகளுக்கு மகசூலே இல்லாத காலங்கள், விலை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காத காலங்களில் உதவும்.
வங்கிக் கடன் தள்ளுபடி
ஒவ்வொரு முறையும் அரசாங்கங்கள் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதை எளிதில் செய்து விடுகிறார்கள். ஆனால் அந்த ரிஸ்கை எப்படி எதிர் கொள்ள வேண்டும் எனத் தெரியாமல் கையாள்கிறார்கள். இப்படி தள்ளுபடி செய்வதால் கடன் வாங்கினால் தள்ளுபடி செய்து விடுவார்கள் என்கிற தவறான எண்ணம் மனதில் பதிந்துவிடும். அதோடு ஒழுங்காக கடனைத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கும் இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்கிறார்.
எல்லாம் அரசியல்
கடந்த 2018-ல் பாரதிய ஜனதா கட்சி ராஜஸ்தான், சத்திஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தன் ஆட்சியை இழந்த காரணத்தினால் அரசியல் ஆதாயம் அடைய பாஜக இந்த கடன் தள்ளுபடி செய்திருக்கிறது. யார் கடனைத் தள்ளுபடி செய்தாலும் பொருளாதாரம் பிரச்னையில் சிக்கிக் கொள்ளும் என பேசி முடித்தார்.